சசிகலா வீட்டை உடனே இடிக்க உத்தரவு: தஞ்சை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது
12/5/2025 2:28:15 PM
தஞ்சை: தஞ்சையில் உள்ள சசிகலாவின் வீட்டை உடனே இடிக்கும்படி மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவுக்கு சென்னை, தஞ்சையில் சொந்தமாக வீடுகள் உள்ளன. தஞ்சை மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் 10,500 சதுர அடி பரப்பளவில் சசிகலாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டில் மனோகர் என்பவர் தனது மனைவியுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இந்த வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் கட்டிடத்தை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், யாரும் அங்கு வசிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதால் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர் சசிகலா, கட்டிட உபயோகிப்பாளர் மனோகர் ஆகியோருக்கு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த அறிவிப்பு நோட்டீசில் கூறப்பட்டு இருந்ததாவது: தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப் பள்ளி ரோட்டில் உள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் அவ்வழியே செல்பவர்களுக்கும், கட்டிடத்தை பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பொதுமக்கள் வந்து செல்லும் இடத்திற்கும், பள்ளிக்கும் அருகாமையில் வீடு உள்ளது.
15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும்
எனவே அபாயகரமான கட்டிடத்தை எவ்விதமான உபயோகத்திற்கும் பயன்படுத்துவதை தவிர்த்து பொதுமக்களுக்கும், கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கும் ஆபத்து ஏற்படாதவாறு கட்டிடத்தை தக்க முன்னேற்பாடுடன் இடித்து அப்புறப்படுத்த வேண்டும். இந்த அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் கட்டிடத்தை அப்புறப்படுத்த
தவறும்பட்சத்தில் சேத, இழப்பீடுகளுக்கு கட்டிட உபயோகிப்பாளர் மற்றும் கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பாவார்கள். மேலும் தாங்கள் மீது மாநகராட்சி சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இந்த செயலுக்கான செலவு தொகை அனைத்தும் தங்களிடம் இருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
எச்சரிக்கை நோட்டீஸ்
இந்த நோட்டீஸ் அனுப்பிய பிறகும் கட்டிடம் அகற்றப்படாததால் தஞ்சை தாசில்தார் வெங்கடேசன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான வீட்டிற்கு வந்தனர். அங்கு இருந்த மனோகரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, சென்னையில் உள்ள சசிகலாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டேன். பழுதடைந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. நாய்கள் மட்டும் தான் உள்ளன. நாங்கள் பின்பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறோம் என்றார்.
இதையடுத்து அதிகாரிகள் அந்த வீட்டின் வாசலில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர். அதில், செப்டம்பர் மாதம் கொடுத்த எச்சரிக்கை நோட்டீசின்படி, இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து அபாயகரமாக உள்ளதால், உள்புறம் செல்லுதல் அல்லது பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்படுகிறது. இப்படிக்கு தஞ்சை மாநகராட்சி ஆணையர் என கூறப்பட்டு உள்ளது. நோட்டீசை ஒட்டிய அதிகாரிகள் வீட்டில் தங்கியிருந்த மனோகரிடம் நீங்கள் உடனே வீட்டை காலி செய்யுங்கள்.
ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்?. ஏற்கனவே கால அவகாசம் அளித்தும் நீங்கள் வீட்டை இடிக்காததால், உங்களுக்கான கெடு முடிந்துவிட்டது. இதனால், தற்போது இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால், உடனடியாக வீட்டை இடிக்க வேண்டும் என்று உரிய நபரிடம் கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர். சசிகலா வீட்டை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.