திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர் 4ம் நாள் தீப திருவிழாவை முன்னிட்டு நாக வாகனத்தில் சந்திரசேகரர் பவனி
12/4/2025 3:50:32 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 4ம் நாளான இன்று விநாயகர் மூஷிக வாகனத்திலும் சந்திரசேகரர் நாக வாகனத்திலும் பவனி வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம் நேற்று இரவு நடந்தது. இதை முன்னிட்டு அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்த பஞ்சமூர்த்திகள், ராஜகோபுரம் எதிரே 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பின்னர் மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும் சிம்ம வாகனத்தில் அண்ணாமலையாரும், அன்ன வாகனத்தில் உண்ணாமுலையம்மனும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாடவீதியில் பவனி வந்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாடவீதி முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 4ம் நாளான இன்றுகாலை மூலவர் அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க காலை உற்சவம் தொடங்கியது.
மூஷிக வாகனத்தில் விநாயகரும், நாக வாகனத்தில் சந்திரசேகரரும் மங்கள வாத்தியங்கள் முழங்க மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 6 மணியளவில் கோயிலில் உள்ள கலையரங்கில் பரத நாட்டியமும், ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. இரவு மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும், காமதேனு வாகனத்தில் உண்ணாமுலையம்மனும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் பவனி நடைபெறும்.