17 பேர் உயிரிழப்புக்கு காரணமான சுற்றுச்சுவர் கட்டியவர்மீது சட்டரீதியாக நடவடிக்கை...கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
12/4/2025 3:38:18 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்கு காரணமான காம்பவுண்ட் சுவர் கட்டியவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காம்பவுண்ட் சுவர் இடிந்து, 17 பேர் பலியான இடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மழை காரணமாக மேட்டுப்பாளையம் நடூர் காலனியில் உள்ள 3 வீடுகள் மீது அருகில் இருந்த மதில் சுவர் விழுந்து, வீடுகள் தரைமட்டமானது.
இதில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் இடிபாடுகளில் கிடந்தவர்கள் மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தடுப்பு சுவர் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். இந்த உயிரிழப்பு மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது. இறந்த 17 பேர் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. அத்துடன், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களுக்கு தலா ரூ.6 லட்சம் என மொத்தம் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். இடிந்து விழுந்த வீடுகளுக்கு பதிலாக குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, அவர்களது தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பகுதியில், பல வீடுகள் ஓட்டு வீடுகளாக இருப்பதை கண்டேன். இந்த வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டித்தரப்படும். ஏற்கனவே, பவானி ஆற்றங்கரையோரம் வசித்து வந்த 300 குடும்பத்தினருக்கு மாற்று இடத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக உருவாக்க அரசு முடிவு எடுத்து, தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்கள், ஆற்றங்கரையோரம் வசித்து வருபவர்கள், பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் வசித்து வருபவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
இந்த உயிரிழப்புக்கு காரணமான, காம்பவுண்ட் சுவர் கட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். காம்பவுண்ட் சுவர் பலம் இழந்துள்ளது என ஏற்கனவே புகார் கொடுத்தார்களா?, இல்லையா?, புகார் கொடுக்கும்போது எந்த அதிகாரிகள் இருந்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆய்வின்போது, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் எம்.பி., கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
செல்பி மோகம்
காம்பவுண்ட் சுவர் இடிந்து 17 பேர் பலியான செய்தி கேள்விப்பட்டு, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று இரண்டாவது நாளாக அப்பகுதியில் குவிந்தவண்ணம் இருந்தனர். பலர், இடிந்த வீடுகளை புகைப்படங்கள் எடுத்தனர். இளைஞர்கள் சிலர், இடிபாடுகளுக்கு நடுவே நின்று, செல்பி எடுத்துக்கொண்டனர். அதை, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
அரசியல் கட்சிகள் படையெடுப்பு
மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியான சம்பவத்தை கேள்விப்பட்டு, பல்வேறு அரசியல் கட்சியினர், நேற்று மேட்டுப்பாளையத்துக்கு படையெடுத்தனர். குரூப் குரூப்பாக சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். மீடியாக்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனால், வீடு மற்றும் உடமைகளை இழந்த மக்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. வெறும் ஆறுதல் மட்டும் கூறிவிட்டு,் அங்கிருந்து கிளம்பிச்சென்று விட்டனர்.
துணிக்கடை அதிபர் சிறையில் அடைப்பு
துணிக்கடை அதிபர் சிவசுப்ரமணியத்தை மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய பின்னர் கோவை மதுக்கரை குற்றவியல் நீதித்துறை நடுவர் ரபீனா பர்வீன் வீட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் சிவசுப்ரமணியம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.