வீட்டுக்கு காரில் அழைத்து செல்வதாக கூறி போலீஸ் குடியிருப்பில் சிறுமி பலாத்காரம்: ஒடிசா ஏட்டு உட்பட 4 பேர் கும்பல் அட்டூழியம்
12/3/2025 4:41:19 PM
புரி: வீட்டுக்கு காரில் அழைத்து செல்வதாக கூறி, போலீஸ் குடியிருப்புக்கு அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ் ஏட்டு உட்பட 4 பேர் கும்பலை ஒடிசா போலீசார் தேடி வருகின்றனர். கடந்த வாரம் ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவரை, 4 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்பிக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்றும், நடுரோட்டில் மக்கள் முன்பாக அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து பேசி வருகின்றனர். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரி மாவட்டத்தில் சிறுமி ஒருவர் 4 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு புரி பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி ஒருவர், மெல்லிசை விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். நிமாபரா பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் போது, அவ்வழியாக காரில் வந்த 4 பேர் கும்பல், அந்த சிறுமியிடம் அவரது வீட்டில் கொண்டு போய் விடுவதாக தெரிவித்தனர். அதற்கு சம்மதம் தெரிவித்த சிறுமியை காரில் ஏற்றிக் கொண்டு, சிறிது தூரம் ெசன்றதும் அப்பகுதியில் போலீஸ் குடியிருப்புக்குள் அழைத்துச் சென்று அந்த சிறுமியை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சில மணி நேரம் கழித்து அந்த சிறுமியை, அவரது வீட்டுப் பகுதியில் இறக்கிவிட்டு சென்றனர். மனமுடைந்த நிலையில் இருந்த சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது, 4 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
அதையடுத்து, கும்பார்பாடா காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், 4 பேர் கும்பலில் ஒருவனின் அடையாள அட்டையை (ஐடி கார்டு) போலீசிடம் கொடுத்தார். அதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஐடி கார்டில் இருப்பவர், ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சேத்தி என்பது தெரியவந்தது. அதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட ஜிதேந்திர சேத்தி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். போலீஸ் குடியிருப்புக்குள் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்த விவகாரம் ஒடிசாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அம்மாநிலத்தில் பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, கும்பார்பாடா காவல் நிலைய ஆய்வாளர் குலமணி சேத்தி கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட சிறுமிைய காரில் அழைத்து சென்று அவரது வீட்டில் விடுவதற்காக, போலீஸ் குடியிருப்புக்குள் வைத்து பலாத்காரம் செய்த போலீஸ் ஏட்டு உட்பட நான்கு பேரையும் கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.