பெருங்களத்தூர் பகுதியில்வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது: சாலைகள் சேதம்
12/3/2025 4:39:03 PM
தாம்பரம்: பெருங்களத்தூர் பகுதியில் உள்ள பல்வேறு நகர்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு தனி வீடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பெருங்களத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, செம்பாக்கம் ஏரியில் இருந்து நன்மங்கலம் ஏரிக்கு செல்லும் மழைநீர், செம்பாக்கம்-திருமலை நகர் பகுதி சாலைகளில் சுமார் 4 அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் மக்கள் பாதையை கடக்க முடியாமல் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதேபோல் சேலையூர்-அகரம்தென் பிரதான சாலையில், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்த சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இங்கு பல்வேறு வீடுகளுக்குள் மழைநீர் வெள்ளமாக புகுந்ததால், பலர் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மொட்டை மாடியில் தஞ்சமடைந்து உள்ளனர்.
எனவே, பெருங்களத்தூர் பகுதிகளில் சாலை மற்றும் வீடுகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, அங்கு கொசுக்கள் மூலம் பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.