சிவசேனா கட்சியை சேர்ந்தவரின் மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா ஏற்பு
11/12/2025 3:20:00 PM
சென்னை: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் சாவந்தின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை ேதர்தல் முடிவுகளை தொடர்ந்து புதிய ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பாதி அளிக்க வேண்டும், சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற சிவசேனாவின் கோரிக்கையை பாஜக ஏற்காத காரணத்தால் கூட்டணியை முறித்து கொள்வதாக சிவசேனா அறிவித்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் சிவசேனா இறங்கி உள்ளது.
அத்துடன் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இருந்தும் சிவசேனா விலகியது. மத்திய அமைச்சரவையில் கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சராக இருந்த, சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளில் இருந்து பாஜக பின்வாங்கி விட்டது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசில் நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானதாக இருக்காது. அதனால் நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என அரவிந்த் சாவந்த் கூறினார். இந்நிலையில் இவரின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இவர் வகித்து வந்த துறையை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூடுலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.