வெப்ப சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் இடியுடன் மழை
11/12/2025 3:16:51 PM
சென்னை: வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்வது தற்போது குறைந்துள்ள நிலையில், வெப்ப சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று ஆலங்குடியில் 60மிமீ மழை பதிவாகியுள்ளது. ராசிபுரம் 50 மிமீ, வால்பாறை 30 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து நிலவும் வெப்ப சலனம் காரணமாக கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.