ரஜினி, கமலுக்கு அரசியல் தெரியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
11/12/2025 2:43:56 PM
சேலம்: சேலம் மாநகர் மற்றும் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் ஓமலூரில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்து, மாநகர், நகரம், பேரூர் மற்றும் ஊராட்சி கிளை வாரியாக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதை தொடர்ந்து முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை போல குறைவான இடங்களில் போட்டியிடுவது இல்லை. அதிகமான இடங்கள் உள்ளன. கூட்டணி கட்சியினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. கால அவகாசம் குறைவாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே அதிமுக சார்பில் விருப்ப மனுக்களை வாங்கி வருகிறோம். அமமுகவை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை. அக்கட்சியை சேர்ந்த பழனியப்பனை சாதாரண நபராகவே கருதுகிறோம். அவருக்கு அதிமுகவில் இடமில்லை. கோவையில் அதிமுக கொடி கம்பம் விழுந்து இருவர் காயமான விவகாரம் இதுவரை எனது கவனத்திற்கு வரவில்லை. அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். சின்னசேலம் பகுதியில் ஹெல்மெட் சோதனையின்போது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத், மோடி நாட்டிலிருந்து வந்து இருக்கிறோம் என அமெரிக்காவில் கூறியதில் தவறில்லை. அண்மையில் மோடி அமெரிக்காவிற்கு சென்று வந்தார். அவருடைய பெயரை கூறினால் எல்லோருக்கும் நன்றாக தெரியும் என்பதற்காக அவ்வாறு கூறியிருக்கலாம். அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தற்போது எதுவும் இல்லை. அரசின் நிதிநிலைமை திருப்தி அடைந்தவுடன் அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.
தமிழகத்தில் சாலை விரிவாக்கம், உயர்மின் கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மின்பாதை அமைத்தால் தான் தடையில்லா மின்சாரம் தர முடியும். அடுத்த பத்து ஆண்டுகளை கவனத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களை முன்மொழிந்து செயல்படுத்த நினைக்கிறது. யாரும் ஒத்துழைப்பு தராவிட்டால் அரசு எப்படி செயல்பட முடியும்.
வெற்றிடம் இருப்பதாக சொல்லும் கமலஹாசன் இடைத்தேர்தல்களில் ஏன் போட்டியிடவில்லை. அவருக்கு வயதாகிவிட்டது. வயது முதிர்வின் காரணமாக, திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காததால் அரசியலுக்கு வருகிறார்கள். ரஜினி, கமல் போன்றவர்கள் திரைத்துறையில் நடித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் குறித்து எதுவும் தெரிவதில்லை. இவர்களை விட மிகப்பெரிய நடிகர் சிவாஜிகணேசன், கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்தித்தபோது என்ன ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே நிலைதான் இவருக்கும் ஏற்படும். கமல்ஹாசன் திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடாததால் தன்னுடைய கட்சியை சேர்ந்தவர்கள் மட்டும் படம் பார்த்தால் போதும் என முடிவு செய்து கட்சியை தொடங்கி உள்ளார். அவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.