திருமண நிகழ்ச்சிக்கு வந்த 6 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொலை
11/9/2025 2:54:55 PM
திருமலை: ஆறு வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பி.கொத்தகோட்டா மண்டலம், கட்டு கிராமத்தை சேர்ந்த சீத்தாரெட்டி. இவரது மனைவி உஷா ராணி. இவர்களுக்கு 3 மகள்கள். சீத்தாரெட்டி, உஷாராணி, இவர்களின் 3வது மகள் வர்ஷினி(6) ஆகிய 3 பேரும் தம்பல்லப்பல்லி தாலுகா அனகல்லு கிராமத்தில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலை திருமண மண்டபத்திற்கு வந்தனர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு வர்ஷினி திடீரென காணாமல் போனார்.
திருமண மண்டபம் உட்பட அதனை சுற்றி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு திருமண மண்டபத்தின் பின்புறம் வர்ஷினி உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக கிடப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குரபாலகோட்டா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் திருமண மண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் வர்ஷினியை அழைத்துச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. வர்ஷினி உடலில் பல இடங்களில் ரத்த காயம் இருப்பதால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான மர்ம நபரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.