மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற கணவன் கைது: 4 மாதத்துக்கு பின் பெங்களூருவில் சிக்கினார்
11/6/2025 4:44:14 PM
நாமக்கல்: நாமக்கல்லில் மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற வாலிபர், 4 மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார். நாமக்கல் ராமாவரம்புதூர் சாவடித்தெருவை சேர்ந்தவர் ரூபிகா (32). இவரது கணவர் சிவா (எ) சிவபிரகாசம் (37). தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரூபிகா பிரிந்து தனது நாமக்கல்லில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.கடந்த ஜூன் மாதம் ரூபிகாவை கொலை செய்யும் நோக்கத்தோடு, சிவபிரகாசம் நாமக்கல் வந்தார். அவர் ரூபிகாவின் வீட்டிற்கு அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்து இரண்டு ஒயர்களை 5 அடி நீள கம்பியுடன் இணைத்து பெட்ரூம் ஜன்னல் வழியாக ரூபிகா மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சி செய்தார்.
இதுகுறித்து ரூபிகாவின் தாய் வளர்மதி, நாமக்கல் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த சிவபிரகாசத்தை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், சிவபிரகாசம் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெங்களுரு சென்று சிவபிரகாசத்தை கைது செய்தனர். சிவபிரகாசம், கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி, தனது மாமனார் தங்கவேலுவை அடித்து கொலை செய்தார். இக்கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.