சென்னை அருகே கல்லூரி மாணவன் சுட்டுக்கொலை: செங்கல்பட்டு கோர்ட்டில் வாலிபர் சரண்
11/6/2025 4:02:54 PM
திருப்போரூர்: சென்னை அருகே கல்லூரி மாணவன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவான வாலிபர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை அருகே வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஷோபனா (45). இவரது கணவர் கண்ணன், இறந்து விட்டார். இவருக்கு முகேஷ்குமார் (19), லோகேஷ்குமார் (15) என்ற மகன்கள் உள்ளனர். இவர்களில் லோகேஷ்குமார், கீரப்பாக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.
ஷோபனா, வேங்கடமங்கலம் அருகே தனியார் தண்ணீர் கேன் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வறுமையான சூழலிலும் முகேஷை, அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் சேர்த்துள்ளார். 2ம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்த முகேசுக்கு, தேர்வுக்கான விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால், இரு நாட்களாக வீட்டிலேயே இருந்தார். நேற்று காலையில் வழக்கம்போல் ஷோபனா வேலைக்கு சென்று விட்டார். 11 மணியளவில் வேங்கடமங்கலம் பார்கவி நகர் பகுதியில் அமைந்துள்ள தனது நண்பர் விஜய் வீட்டிற்கு முகேஷ் சென்றார். அங்கு, தனியாக ஒரு அறையில் இருவரும் பேசி கொண்டிருந்தனர். விஜய்யின் அண்ணி பவானி சமையல் செய்து கொண்டிருந்தார். வீட்டிற்கு வெளியே விஜய்யின் தம்பி உதய் அமர்ந்திருந்தார்.
11.30 மணியளவில் விஜய், முகேஷ் இருந்த அறையில் இருந்து திடீரென பயங்கர சத்தம் வந்தது. பவானி, உதயா ஆகியோர் அலறியடித்து சென்று பார்த்தனர். முகேஷின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியால் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். விஜய், துப்பாக்கியை ஒரு துணிப்பையில் சுற்றிக் கொண்டு வெளியே ஓடினார். இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, முகேஷை மீட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே முகேஷ் உயிரிழந்தார். சம்பவம் குறித்து அறிந்ததும் காஞ்சிபுரம் எஸ்.பி. கண்ணன், மாமல்லபுரம் கூடுதல் எஸ்.பி. சுந்தரவதனம், தாழம்பூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த மாதிரிகளை சேகரித்தனர்.
விசாரணையில், விஜய் தனியார் உணவு சப்ளை (சுமோட்டோ) நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவர் மீது கூடுவாஞ்சேரி காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. வேங்கடமங்கலம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ரவி, அவரது மகன்கள் அன்புராஜ், அன்பரசு ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மேலும், புளூவேல் என்ற செல்போன் வீடியோ கேம், பப்ஜி கேம் போல, ‘டேஞ்சர் ஷார்க்’’ எனப்படும் செல்போன் வீடியோ கேமை ஆபத்தானது. இருவரும் எப்போதும் விளையாடிக் கொண்டு இருப்பதை குடும்பத்தினர் கவனித்து எச்சரித்துள்ளனர்.
இந்த விளையாட்டில் கொலை செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் இருப்பதாகவும், ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வெறியால் துப்பாக்கியால் சுட்டால் என்ன நடக்கும் என்பது தெரியாமல், இந்த கொலையை அவன்செய்திருக்கக் கூடும் என்ற ரீதியில் இரு குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தாழம்பூர் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான விஜய்யை தேடி வந்தனர். 5 தனிப்படை போலீசாரும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விஜய் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி காயத்திரி தேவி உத்தரவிட்டார். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
பல்லாவரம் சந்தையில் துப்பாக்கி வாங்கப்பட்டதா?
இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, பல்லாவரம் வாரச்சந்தையில் வடநாட்டு வாலிபரிடம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வடமாநில வாலிபர்களிடம் விசாரணை நடக்கிறது. இது தவிர, தாம்பரத்தில் வசிக்கும் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் துப்பாக்கி சப்ளை செய்வது தெரியவந்துள்ளது. அவரிடமும் போலீசார் விசாரிக்க உள்ளனர். இதனால் பல்லாவரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.