கொரட்டூரில் வீட்டை உடைத்து 11 சவரன் கொள்ளை
11/6/2025 4:01:13 PM
அம்பத்தூர்: கொரட்டூரில் மெக்கானிக் வீட்டை உடைத்து, அங்கு பீரோவில் இருந்த 11 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், கோபாலகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் மகேஷ்குமார் (34). டூ-வீலர் மெக்கானிக். பாடிக்குப்பத்தில் கடந்த வாரம் மகேஷ்குமாரின் ஒரு உறவினர் திடீரென காலமானார். நேற்று அவரது காரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மகேஷ்குமார் வீட்டை பூட்டிவிட்டு, நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கிளம்பி சென்றார்.
நேற்று காலை மகேஷ்குமார் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை அக்கம்பக்கத்தினர் மகேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். மகேஷ்குமார் குடும்பத்துடன் வீடு திரும்பினார். அவர் வீட்டுக்குள் சோதனை செய்தபோது, பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 11 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது மகேஷ்குமாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.
மேலும், அங்கு கைரேகை நிபுணர்கள் வந்து, மகேஷ்குமாரின் வீட்டு கதவு, பீரோ ஆகியவற்றில் மர்ம கும்பலின் கைரேகைகளை பதிவு செய்தனர். இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.