ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டில்சுகாதார, தூய்மை பணிகள் தீவிரம்
11/6/2025 4:00:32 PM
பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, டெங்கு காய்ச்சலால் 5 பேர் இறந்த நிலையில், அனைத்து பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகளிலும் துப்புரவு பணிகள், தூய்மை மற்றும் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தும்படி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வாணிப கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை செய்து அபராதம் விதித்தனர். மேலும், அங்கிருந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்களும் அகற்றப்பட்டன.
இந்நிலையில், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் நடராஜன், கலைச்செல்வி ஆகியோர் தலைமையில் துப்புரவு, தூய்மை பணிகளும், வட்டார மருத்துவ அலுவலர் சந்தியா தலைமையில் சுகாதாரப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், நேற்று அம்மையார்குப்பம் ஊராட்சியின் 12 வார்டுகளிலும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோகிலா, ஊராட்சி செயலர் விஸ்வநாதன் ஆகியோர் மேற்பார்வையில், வீடு வீடாக மருத்துவ பணியாளர்கள் மூலம் தேவையற்ற கழிவு பொருட்களும் அகற்றப்பட்டன.
அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குளோரின் கலந்த குடிநீர் வழங்கப்பட்டது. அங்கிருந்த முட்புதர்கள், குப்பைகள் அகற்றப்பட்டன. இதேபோல் சுகாதார ஆய்வாளர் பாலன் தலைமையில் சுகாதாரப் பணிகளும் நடைபெற்றன. மேற்கண்ட 2 ஒன்றியங்களில் தூய்மை, சுகாதார பணிகளை தொடர்ச்சியாக அதிகாரிகள் அதிரடியாக மேற்கொண்டு வருகின்றனர்.