திருமணம் செய்ய காதலன் மறுப்பு: விஷ சாக்பீசை பொடியாக்கி தின்ற பெண் போலீசுக்கு தீவிர சிகிச்சை...அஞ்செட்டியில் பரபரப்பு
11/5/2025 3:44:09 PM
தேன்கனிக்கோட்டை: திருமணம் செய்ய காதலன் மறுத்தகாரணத்தால் விஷசாக்பீசை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் போலீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பாண்டுரங்கன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகள் நதியா (26). இவர், திருப்பூர் ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிகிறார். அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கண்ணன் (28). இவர் அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். தற்போது அவர் கிருஷ்ணகிரியில் மோப்பநாய் பிரிவில் உள்ளார்.
இந்த நிலையில், நதியாவும், கண்ணனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணனிடம் நதியா அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் கண்ணன், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி திருமணத்தை தட்டிக்கழித்து வந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நதியா விடுமுறை எடுத்துக்கொண்டு அஞ்செட்டிக கிராமத்துக்கு வந்துள்ளார்.
நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எறும்புக்கான சாக்பீசை பொடியாக்கி சாப்பிட்ட நிலையில் நதியா மயங்கிக் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், நதியாவை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.