ஈரோடு கைத்தறி உதவி இயக்குநர் ஆபீசில் 2வது நாளாக லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.31.83 லட்சம் பறிமுதல்
11/5/2025 3:22:40 PM
ஈரோடு: ஈரோட்டில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2வது நாளாக சோதனை நடத்தினர்.ஈரோடு பவானி மெயின் ரோடு லட்சுமி தியேட்டர் பகுதியில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் அலுவலர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகளிடம் இருந்து லஞ்சமாக பணம் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று மாலை ஈரோடு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கருணாகரன் தலைமையிலான போலீசார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை கைப்பற்றி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத 31 லட்சத்து 83 ஆயிரத்து 365 கைப்பற்றினர். இந்த பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்தும், லஞ்ச பணமாக பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். இரவு 8 மணிக்கு பிறகு அங்கிருந்த பெண் ஊழியர்களை மட்டும் அனுப்பி வைத்தனர். அங்கிருந்த மற்ற ஊழியர்களிடம் விடிய, விடிய விசாரணை மேற்கொண்டனர். இன்று 2வது நாளாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அலுவலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களை உரிய விசாரணை மேற்கொண்ட பிறகே அவர்களை அனுப்பி வைக்கிறார்கள். பல்வேறு கூட்டுறவு சங்க அலுவலர்களிடம் இருந்து பணம் பெற்றது முகாந்திரம் உள்ளதால் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகம் மட்டுமின்றி அசோகபுரம் அய்யன்காடு பகுதியில் உள்ள ஈரோடு கூட்டுறவு தீவிர கைத்தறி வளர்ச்சி திட்ட அலுவலகத்திலும், சூளையில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்க அலுவலகத்திலும் தனிக்குழுவாக நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் தரன் சென்னையில் இன்று நடைபெறவுள்ள ஆய்வு கூட்டத்திற்காக சென்று விட்டார். கணக்கில் வராத பணம் லஞ்ச பணமாக உள்ளதால், இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.