ஆண் குழந்தை பிறக்காததால் ஆத்திரம்: பெண் சிசுவை உயிருடன் புதைத்து கொன்ற கொடூர தந்தை கைது...திருக்கோவிலூர் அருகே அதிர்ச்சி
11/5/2025 3:17:05 PM
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே பிறந்து 17 நாட்களே ஆன பெண் சிசுவை உயிருடன் புதைத்துக் கொன்ற கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் இச்செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வடமருதூர் கிராமத்தை ேசர்ந்தவர் துரைக்கண்ணு. இவரின் மகன் வரதராஜன் (29). இவரது மனைவி சவுந்திரா (22). இவர்களுக்கு கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அத்தண்டமருதூரில் உள்ள தனது நிலத்தில் வீடு கட்டி வரதராஜன் வசித்து வருகிறார். இந்தநிலையில் சவுந்திரா கர்ப்பமடையவே தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என கூறியுள்ளார்.
பெண் குழந்தை பிறந்தால் தூக்கிப்போட்டு விடுவேன் எனவும் தெரிவித்து வந்துள்ளார். ஆனால் கடந்த 17 நாட்களுக்கு முன்பு சவுந்திராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் இருந்த வரதராஜனுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு 12 மணியளவில் சவுந்திரா குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கிவிட்டார். அதிகாலையில் எழுந்த வரதராஜன் குழந்தையை யாருக்கும் தெரியாமல் அத்தண்டமருதூர் காட்டுப் பகுதியில் கொண்டு சென்று குழிதோண்டி உயிருடன் புதைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். இதன்பிறகு 4 மணியளவில் சவுந்திரா எழுந்து பார்த்தபோது, குழந்தையை காணாததால் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுபற்றி கணவனிடம் கேட்டபோது தனக்கு தெரியாது என்று தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து உறவினர்களுடன் குழந்தையை தேடியபோது வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆற்றுப் பகுதியில் கால் தடம் இருந்தது. அந்த வழியிலேயே சென்றபோது குழிதோண்டிய தடயம் இருந்தது. இதையடுத்து குழியை பார்த்தபோது, குழந்தை புதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதுபற்றி விசாரணை நடத்தி, வரதராஜனை கைது செய்தனர். குழந்தை புதைக்கப்பட்ட இடத்துக்கு அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். திருக்கோவிலூர் தாசில்தார் முன்னிலையில் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பெண் குழந்தை என்பதால் வரதராஜன் தனது குழந்தையை கொலை செய்தாரா? வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 17 நாட்களே ஆன ெபண் குழந்தையை தந்தையே உயிருடன் புதைத்து கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.