அந்தமான் அருகே காற்றழுத்தம் புயலாகும் 2 நாட்களில் மழை பெய்யும்
11/5/2025 3:16:03 PM
சென்னை: அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தம் புயலாக மாறும் பட்சத்தில் 2 நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த மகா புயல் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து, கிழக்கு மத்திய அரபிக்கடல் நிலை கொண்டுள்ளது. நேற்று இரவு 11.30 மணியளவில் குஜராத்தின் போர்பந்தர் கடற்கரையிலிருந்து தென்மேற்கு திசையில் 670 கி.மீ தொலைவில் இந்த புயல் நிலை கொண்டிருந்தது. மகா வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது. அதனால், அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இந்த புயல் குஜராத்தில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இந்த புயல் காரணமாக அரபிக் கடல் பகுதியை ஒட்டிய கடலோரப் பகுதியில் உள்ள ஈரப்பதம் முற்றிலுமாக உறிஞ்சப்பட்டது. இதனால் தமிழகத்தில் மழை குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெயில் அதிகமாக பதிவாகவில்லை. நேற்றைய அதிகபட்ச வெயில் 93.5 டிகிரி பாரன்ஹீட் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பதிவானது. அடுத்த இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு பருவமழையால் ஒரிரு இடங்களில் லோசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தமானை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல்பகுதியில் புதியதாக ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது.
அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது. பின்னர் அந்த புயல் வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து புவனேஸ்வர் அருகே கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் வலுப்பெறும் போது வட கடலோர மாவட்டங்கள், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர், திருநெல்வேலி, திருச்சி, அரியலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். அந்தமான் பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.