பொருளாதார மந்தநிலை, விவசாயிகள் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம்: எதிர்கட்சி தலைவர்களுடன் இன்று சோனியா அவசர ஆலோசனை
11/4/2025 3:45:23 PM
புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பொருளாதார மந்தநிலை, விவசாயிகள் பிரச்னை, அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் ஆகிய முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
நாட்டின் பொருளாதாரம், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. வாகன உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் முடங்கியுள்ள நிலையில் பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். முன்னணி நிறுவனங்களும் வரிசையாக மூடப்பட்டு வருகிறது. உற்பத்தி சரிந்ததையடுத்து நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மோசமான அளவுக்கு சரிந்துள்ளது.
பொருளாதாரத்தை சீர் செய்ய மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலன்களை தராததால் நிதி நிபுணர்கள் கவலை அடைந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளதாகவும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஆலோசனை பெறலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் ஆலோசனை கூறினார். இதனிடையே தாய்லாந்தில் நடைபெற்றுவரும் ஆசிய மாநாட்டில் பங்கேற்க அங்கு சென்றுள்ள பிரதமர் மோடி ஆசிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுகிறார். சீனாவின் முயற்சியால் மேற்கொள்ளப்படும் இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில் இந்த மாதம் 18ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கூட உள்ளது. அப்போது பொருளாதார மந்தநிலை, விவசாயிகள் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், எதிர்கட்சி தலைவர்களின் போன் ஒட்டுகேட்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து புயலை கிளப்ப குறித்து எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, எதிர்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். இதில் பங்கேற்குமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதை பாஜ தலைவர்களே ஒத்துக்கொள்ளும் நிலையில், பிரதமர் மோடி ஒத்துக்கொள்ளாதது வேதனை அளிப்பதாக நேற்று முன்தினம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜ அரசின் முன்யோசனை இல்லாத பண மதிப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கையால் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்தும் இன்றைய கூட்டத்தில் அவர் விவாதிப்பார் என காங் வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் பாஜ அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நாளை முதல் 10 நாட்களுக்கு நாடு முழு போராட்டம நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. சோனியாகாந்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அவர் தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சி கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.