அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் அதிநவீன சொகுசு வீடியோ கோச் பஸ்கள் இயக்க திட்டம்
11/4/2025 3:22:47 PM
சென்னை: நவீன வசதிகளுடன் கூடிய 100 பஸ்களை ₹19.50 கோடி செலவில் தயாரிக்க, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்வாயிலாக தினசரி நாள்தோறும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் நீண்ட தூர போக்குவரத்து சேவையினை வழங்கி வருகிறது. நாள்தோறும் 251 வழித்தடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் மட்டும் அல்லாது, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களுக்கு பஸ்கள் செல்கின்றன.
இந்நிலையில் அரசு போக்குவரத்துக்கழகங்களின் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் மிகவும் பழையது. இதனால் மழைகாலத்தில் தண்ணீர் உள்ளே வருவது, சீட்டுகள் உடைந்து காணப்படுவது போன்ற பிரச்னைகள் இருந்து வந்தது. மேலும் ஓடும் பஸ் ரிப்பேராகி நிற்பது போன்றவை தினமும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மழைகாலங்களில் நிலைமை மேலும் மோசமாக இருந்தது. இதையடுத்து அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.1314 கோடி செலவில் 4381 பஸ்கள் வாங்கப்பட்டு, பொதுமக்களின் சேவைக்காக விடப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் 2,213 புதிய பிஎஸ்-6 தரத்திலான பஸ்களும், 500 மின்சார பஸ்களும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
இதன் முன்னோட்டமாக ஒரு மின்சார பஸ் சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய 100 பஸ்களை ரூ.19.50 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அனைத்து அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் இயக்கப்பட்டு வரும் பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் (எஸ்இடிசி) 100 பஸ்களை ரூ.19.50 கோடி செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இயக்கப்படும் புதிய பஸ்களின் எண்ணிக்கை மேலும் உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு வசதிகள்
பஸ்சின் தரைத்தளம், கட்டமைப்பு, மேல்தளம் ஆகியவை அகலமானதாக இருக்கும். புஷ்-பேக் சீட்டுகள் அமைக்கப்படும். அதிநவீன சொகுசு வீடியோ கோச் ஆக கட்டமைக்கப்படும். முன்பகுதி, பின்பகுதியில் அதிக தடிமன் கொண்ட கண்ணாடிகள் பொருத்தப்படவுள்ளது. ஆபத்துகாலத்தில் வெளியேறுவதற்கான வழி, சுமைகளை வைக்க ரேக், நடத்துனருக்கான டிக்கெட் பெட்டி, தீ தடுப்பு கருவி, சீட் நம்பர் பிளேட் இடம்பெறும். மொபைல் போன் சார்ஜர், எல்இடி ரூட் போர்டு, அகலமான படிக்கட்டுகள், முன்பகுதியில் பயணிகளுக்கான நுழைவாயில் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறுகின்றன.