திருச்சியில் ரூ.13 கோடி நகை கொள்ளை விவகாரம்: கொள்ளையடித்த ஊரிலேயே பெண்ணுடன் குடும்பம் நடத்திய கும்பலின் தலைவன்
10/11/2025 3:26:38 PM
திருவெறும்பூர்: திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2ம் தேதி அதிகாலை சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ரூ.13 கோடி நகைகளை அள்ளிச்சென்றனர். இதுதொடர்பாக, திருவாரூர் மடப்புரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன் (35) மற்றும் கொள்ளை கும்பல் தலைவனின் அக்கா கனகவல்லி (57) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4.8 கிலோ தங்கம், பிளாட்டினம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், முருகனின் மற்றொரு உறவினர் முரளி, சீராத்தோப்பை சேர்ந்த கார்த்தி, அழகர் காலனியை சேர்ந்த மாறன் உள்பட 20 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சுரேஷ் (28) மற்றும் கும்பலின் தலைவன் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் (44) ஆகியோரை தனிப்படையினர் தேடி வந்த நிலையில், நேற்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டில் சுரேஷ் சரணடைந்தார். இவர் தான் முருகனுடன் நேரடியாக கொள்ளையில் ஈடுபட்டவர் என்பதால் முருகனின் இருப்பிடம் குறித்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் முருகன் திருச்சி திருவெறும்பூரிலேயே வாடகை வீடு எடுத்து தங்கி இருப்பதாக கூறி உள்ளான். அதன் பேரில் தனிப்படை போலீசார் நேற்று மாலை 3 மணி அளவில் திருவெறும்பூர் அருகே இந்திராநகர், நறுங்குழல் நாயகிநகர் பகுதியில் முருகன் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
அந்த வீட்டை கண்டறிந்து அதனை முற்றுகையிட்டனர். அப்போது, அந்த வீடு பூட்டி கிடந்தது. வீட்டு உரிமையாளர் அப்துல் காதரை பிடித்து விசாரணை நடத்தியதில் முருகன் கடந்த 7ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டதாகவும், போகும்போது தன்னிடம் சொல்லவில்லை, பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்து விட்டு போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆயுதபூஜை தினத்தில் முருகனின் வீட்டுக்கு மேலும் சில ஆண்கள் வந்து உள்ளனர். அவர்கள் முருகனுடன் கொள்ளையில் ஈடுபட்டவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அப்துல் காதரை பிடித்து தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 மாதத்திற்கு முன்னர் தான் முருகன் இங்கு வந்து வாடகைக்கு வீடு பிடித்து குடியேறி இருக்கிறான். ₹60 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து ரூ.6 ஆயிரம் வாடகைக்கு வந்ததாகவும் தெரியவந்தது. முருகனுடன் மஞ்சுளா (35) என்ற பெண், மாற்றுத்திறனாளி பெண் சவுமியா (7), 3 வயது சிறுவன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் தங்கி உள்ளனர். இவர்கள் முருகனின் மனைவி, குழந்தைகளா, அல்லது தனியாக இருந்தால் யாரும் சந்தேகப்படுவார்கள் என்பதால் இப்படி குடும்பமாக ஒரு செட்டப்பில் வாழ்ந்து வந்தாரா என்பது தெரியவில்லை.
மேலும் முருகன் பகல் நேரங்களில் வீட்டில் தான் இருப்பாராம். அக்கம் பக்கத்தினர் யாரும் வந்து கேட்டால் இதுவரை வெளிநாட்டில் வேலை செய்து வந்தேன். விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறேன் என்றும் கூறி வந்துள்ளார். முருகன் 2 கார்கள் (இன்னோவா, இண்டிகா கார்கள்) வைத்திருந்திருக்கிறார். அந்த கார் வீட்டுக்கு எதிரே உள்ள காலி மனையில் நிறுத்தி உள்ளார். சமீபத்தில் பெய்த மழையால் முருகன் குடியிருந்த பகுதி சேறும் சகதியுமாக மாறி உள்ளது. அதனை சரி செய்ய முருகன் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்து வந்துள்ளார். அத்துடன் விலை உயர்ந்த வெளிநாட்டு நாய் ஒன்றும் வளர்த்து வந்திருக்கிறார். தினமும் காலையில் அந்த நாயுடன் வாக்கிங் செல்வார். அப்போது யாரும் முருகனிடம் பேசினால் அவரும் சகஜமாக பழகி வந்திருக்கிறார். வீட்டில் ஒன்றரை டன் சக்தியுடன் கூடிய 3 ஏசி பொருத்தி உள்ளார். அவசரத்தில் தப்பி சென்றதால் அவர் ஏசி மிஷின்களை கழற்றாமல் போய் உள்ளார். அத்துடன் வீட்டுக்குள் ஒரு டூவீலரும் நின்று கொண்டிருக்கிறது. அதையும் விட்டு விட்டு போய்விட்டார். முருகன் வீட்டில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் கொடுத்து உள்ளார்.
ஆயுத பூஜை தினத்தில் வேலைக்கார பெண்ணுக்கு ரூ.1000 ரொக்கம் மற்றும் ஸ்வீட் பாக்ஸ்சும் முருகன் கொடுத்து விட்டு இனி வேலைக்கு வரவேண்டாம் நாங்கள் வெளியூர் செல்கிறோம் என கூறி உள்ளார். முருகனின் போட்டோ சமீபத்தில் பத்திரிகைகளில் வெவளியாகி உள்ளது. அதில், முருகனுக்கு ஒரு பல் இல்லை. ஆனால் முருகன் தற்போது வேறு கெட்டப்பில் உள்ளார். பல் செட் பொருத்தி இருக்கிறார். அவருக்கு ஓட்டைப்பல் இல்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். அப்துல் காதர் வீட்டில் தங்கியிருந்தது பிரபல கொள்ளையன் முருகன் தான் என நேற்று தான் அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்து உள்ளது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
எஸ்.பி. விசாரணை
தனிப்படை போலீசார் வந்து சென்ற சிறிது நேரத்தில் முருகன் வீட்டுக்கு திருச்சி எஸ்.பி. ஜியாஉல் ஹக் வந்து விசாரணை நடத்தி உள்ளார். 2ம் தேதி அதிகாலை கொள்ளையடித்து விட்டு 7ம் தேதி வரை கொள்ளை நடந்த இடத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவிலேயே வாடகை வீடு எடுத்து தங்கி இருந்த முருகனை போலீசார் பிற மாநிலங்களிலும், பிற மாவட்டங்களிலும் தேடி வந்த நிலையில் அவன் அருகிலேயே இருந்து போலீசாரின் நடவடிக்கைகளை தெரிந்து கொண்டு ஜாலியாக வாழ்ந்து வந்த தைரியத்தை அறிந்து போலீசாரே அதிர்ந்து போய் உள்ளனர். 7ம் தேதி முருகன் 2 கார்களில் தப்பி சென்று உள்ளார். அந்த கார்களின் பதிவெண்களை கண்டறிந்த போலீசார் அந்த கார் 7ம் தேதி இரவு எந்த சோதனை சாவடியை கடந்து உள்ளது என தஞ்சை, நாகை, திருவாரூர், சென்னை மார்க்கத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடி கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். முருகன் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலம் அல்லது வெளி மாவட்டங்களுக்கு போய் இருக்கலாம் என தெரிகிறது.