வேலையில் சேர்ந்த 20வது நாளில் பெண் தபால்காரர் தீக்குளித்து சாவு
10/9/2025 3:08:57 PM
மன்னார்குடி: தபால்துறை பணியில் சேர்ந்த 20 நாளில் பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரை லைன் பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவர் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார். இவரது கணவன் 4 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகள் பிரீத்தி (21). இவர் கோவையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிஇ படித்தார். சமீபத்தில் நடந்த போட்டி தேர்வில் வெற்றிப்பெற்ற பிரீத்திக்கு, மத்திய அரசின் தபால் துறையில் வேலை கிடைத்தது. மன்னார்குடி தாமரைக்குளம் பகுதியில் உள்ள தனது தாத்தா தங்கையன் வீட்டில் தங்கி கடந்த 20 நாளாக எடகீழையூர் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு தாத்தா வீட்டில் இருந்த பிரீத்தி, திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். வலியால் கதறியதால் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர். தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய பிரீத்தியை மீட்டு மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தனக்கு சொந்தமான பூர்வீக இடத்தை விற்க தாய் சுமதி முயற்சி செய்துள்ளார். இதற்கு பிரீத்தி எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதன்காரணமாக தாய், மகள் இடையே பிரச்னை இருந்துள்ளது. நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை பிரீத்தி காதலித்துள்ளார். பிரீத்தி வேலைக்கு சேர்ந்து விட்டாலும் இன்ஜினியரிங் படிப்பை கைவிடவில்லை. சில நாட்களுக்கு முன் தேர்வு எழுத கோவையில் உள்ள கல்லூரிக்கு சென்றபோது அங்கு 2 நாட்கள் ஓட்டலில் தங்கி உள்ளார். இது காதலனுக்கு பிடிக்கவில்லை. பிரீத்தி மீது அவர் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் காதலர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஒரு காரணத்தால் பிரீத்தி தற்கொலை செய்திருக்கலாம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.