200 பவுன் நகை, ரூ.10 லட்சம், பைக் திருட்டு 15 நாட்களாக தினமும் நடக்கும் கொள்ளையால் பொதுமக்கள் பீதி
9/12/2025 2:52:13 PM
திருப்பத்தூர்: மளிகைக்கடை மற்றும் வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் நகை, பணம் மற்றும் பைக்கை திருடிச்சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கடந்த 15நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசத்தால் இதுவரை சுமார் 200 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. மேலும் போலீசாரையே கார் ஏற்றி கொலை செய்யவும் முயற்சி நடந்தது. குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூர் அடுத்த லக்கிநாயக்கன்பட்டியில் சலூன் தொழிலாளி வெங்கடேசன்(35) வீட்டில் கொள்ளையடிக்க 6 முகமூடி ஆசாமிகள் வந்தனர். அப்போது வெங்கடேசன் வீட்டு நாய், கொள்ளையர்களை பார்த்து குரைத்துள்ளது. இதனால் கொள்ளையர்கள், நாய்க்கு விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டு காரில் தப்பிச்சென்றனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மதியம் திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாதுகாப்பு அளிக்கும்படி கோஷமிட்டனர். இதையடுத்து, டிஎஸ்பி தங்கவேலு, முகமூடி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாக கூறி பொதுமக்களை சமரசம் செய்தார்.
இந்நிலையில் நேற்றிரவும் திருப்பத்தூர் பகுதியில் மளிகைக்கடை மற்றும் வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை கொள்ளையடித்துசென்றது அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம்: திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்(46). அப்பகுதியில் டீக்கடை மற்றும் மளிகைக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் கடையை நேற்றிரவு பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பார்த்தபோது கடையில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், வெளியே நிறுத்தியிருந்த பைக் ஆகியவற்றை காணவில்லை. அருகே உள்ள சீனிவாசன்(37) என்பவர், தனது தம்பி பூபாலனுக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று மாலை வீட்டை பூட்டிக்கொண்டு திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 சவரன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம், ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். திருப்பத்தூர் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.