கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு: சக மாணவர் வெறிச்செயல்
9/10/2025 3:41:41 PM
சிதம்பரம்: காதல் பிரச்னையில் கல்லூரி மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் கதிராமங்கலத்தை சேர்ந்தவரின் மகள் (19), கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாமரை விடுதியில் தங்கி வகுப்புகளுக்கு சென்று வந்தார். குத்தாலம் தாலுகாவை சேர்ந்த சங்கர் மகன் முத்தமிழன் (22) என்பவரும் இதே பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மாணவி வேறொருவருடன் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.
நேற்று மாலை மாணவியும், முத்தமிழனும் பல்கலைக்கழக வளாகத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது முத்தமிழன், மாணவியிடம் வேறொருவருடன் பேசி வருவது தொடர்பாக கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மாணவி, ‘இனி உன்னை காதலிக்க போவதில்லை’ எனக் கூறியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த முத்தமிழன், ஆசிட்டை வாங்கி வந்து, மாணவி மீது வீசியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி, அலறி துடித்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆசிட் வீச்சு சம்பவத்தை பார்த்ததும், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு முத்தமிழனை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
இதனால் அவரும் காயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அண்ணாமலைநகர் போலீசார், மாணவர் முத்தமிழனை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.