குடும்பத் தகராறில் மாமனார், மாமியாருக்கு வெட்டு மருமகன் உட்பட 3 பேர் கைது
9/10/2025 3:36:42 PM
புழல்: குடும்ப பிரச்னையில் மாமனார், மாமியாரை வெட்டிய மருமகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை செங்குன்றம் அடுத்த எடப்பாளையம், திருவள்ளூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் பவன் (60). இவர் ரியல் எஸ்டேட் செய்கிறார். இவரது மனைவி லதா (56). இவர்களது மகள் உமா (30). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவரை உமா 2வது திருமணம் செய்துகொண்டார். இதன்காரணமாக மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி இரவு மணிகண்டன், அவரது நண்பர்கள் ஆகியோர் பவன் வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்தனர்.
அப்போது திடீரென மண்கண்டன் தான் வைத்திருந்த கத்தியால் மாமனார் பவன் தலையில் சரமாரி வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த மாமியார் லதாவையும் வெட்டியுள்ளார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் வெட்டிய கும்பல் அனைவரும் தப்பினர். வெட்டு காயம் அடைந்த தம்பதியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி புகாரின்படி சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து மணிகண்டன் மற்றும் நண்பர்களை தேடி வந்தனர். இதில் மணிகண்டன், அதே பகுதியை சேர்ந்த ராஜா (28), செங்குன்றம் பகுதியை சேர்ந்த தீபக் (26) ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.