கர்நாடகாவில் எடியூரப்பா அமைச்சரவை விஸ்தரிப்பு: 17 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்
8/20/2019 4:48:12 PM
பெங்களூரு: கர்நாடக மாநில பாஜ அரசின் முதல் அமைச்சரவை விஸ்தரிப்பு இன்று காலை 10.30 மணிக்கு நடந்தது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் உள்பட 17 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் வஜுபாய்வாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் கட்சி தலைமைக்கு எதிராக போர்கொடி உயர்த்தியுள்ளனர்.
மாநிலத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றம் காரணமாக எச்.டி.குமாரசாமி தலைமையில் இயங்கிவந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு சட்டபேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் கடந்த மாதம் 23ம் தேதி கவிழ்ந்தது. அதை தொடர்ந்து பேரவையில் அதிக உறுப்பினர்கள் கொண்ட பெரிய கட்சியாக இருக்கும் பாஜவை ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த மாதம் 26ம் தேதி மாலை 6 மணிக்கு நடந்த விழாவில் மாநில முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றார்.
முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி அமைந்து 26 நாட்கள் கடந்தும் அமைச்சரவை விஸ்தரிப்பு செய்யாமல் இருந்ததால் சொந்த கட்சி எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்தனர். இதனிடையில் கடந்த வாரம் டெல்லி சென்ற முதல்வர் எடியூரப்பா, அமைச்சரவை விஸ்தரிப்பு செய்வது தொடர்பாக பாஜ தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி மாதிரி பட்டியல் கொடுத்தார். மாநில சட்டபேரவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையில் முதல்வரை தவிர 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளது.
பாஜ தலைமை அனுமதி
ஆனால் முழு அமைச்சரவை விஸ்தரிப்பு செய்ய அமித்ஷா அனுமதி வழங்காமல் முதல் கட்டமாக முக்கிய துறைகளின் அமைச்சர்களாக 17 பேரை மட்டுமே அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கியதுடன், செவ்வாய்க்கிழமை (இன்று) பதவியேற்பு விழா நடத்த ஏற்பாடு செய்யும்படி கூறியதுடன், யார் யாரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது என்ற பட்டியல் அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். அதன் நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு மேல் அமைச்சரவையில் இடம் பெறுவோர் பட்டியலை முதல்வருக்கு அனுப்பினார். அதை ஆளுநருக்கு முதல்வர் அனுப்பி வைத்தார்.
புதிய அமைச்சர்கள்
பதவியேற்பு
அதை தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடந்தது. முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா முன்னிலையில் நடந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர், முன்னாள் துணைமுதல்வர்கள் ஆர்.அசோக், கே.எஸ்.ஈஸ்வரப்பா, கோவிந்தகரஜோள், லட்சுமண்சவதி, பி.ஸ்ரீராமுலு, எஸ்.சுரேஷ்குமார், வி.சோமண்ணா, சி.டி.ரவி, பசவராஜ் பொம்மை, அஷ்வத் நாராயண், கோட்டா சீனிவாசபூஜாரி, ஜே.சி.மாதுசாமி, சி.சி.பாட்டீல், எச்.நாகேஷ், பிரவு சவுஹான் மற்றும் சசிகலா ஜோள்ளே அன்னசாஹப் ஆகிய 17 பேருக்கு ஆளுநர் வஜுபாய்வாலா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
விழாவில் முதல்வர் எடியூரப்பா, தலைமை செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கர், மாநில போலீஸ் ஐஜி மற்றும் டிஜிபி நீலமணி என்.ராஜு, மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உள்பட அரசு அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டபேரவை, மேலவை உறுப்பினர்கள், போலீஸ் அதிகாரிகள், நீதிதுறையை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். விழா முன்னிட்டு ஆளுநர் மாளிகை வளாகம் விழாகோலம் பூண்டிருந்தது. பதவியேற்பு விழா முன்னிட்டு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வீதி, ஆளுநர் மாளிகை சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க 8 துணை போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
லிங்காயத்து வகுப்பிற்கு முன்னுரிமை
முதல்வர் எடியூரப்பா அமைச்சரவையில் லிங்காயத்து வகுப்பினருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இன்று பதவியேற்றவர்களின் ஜெகதீஷ்ஷெட்டர், சி.சி.பாட்டீல், ஜே.சி.மாதுசாமி, வி.சோமண்ணா, பசவராஜ்பொம்மை, லட்சுமண்சவதி. சசிகலா ஜோள்ளே ஆகிய 7 பேர் லிங்காயத்து வகுப்பை சேர்ந்தவராக உள்ளனர். முதல்வர் எடியூரப்பாவுடன் சேர்த்தால் 8 பேர் அவ்வகுப்பை சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆர்.அசோக், சி.டி.ரவி, அஷ்வத் நாராயண் ஆகிய 3பேர் ஒக்கலிக வகுப்பை சேர்ந்தவர்களாகவும், கோவிந்தகரஜோள், பிரவு சவுஹான், எச்.நாகேஷ் ஆகியோர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
பி.ஸ்ரீராமுலு (வால்மீகி), எஸ்.சுரேஷ்குமார் (பிராமிண்), கே.எஸ்.ஈஸ்வரப்பா (குருபர்), கோட்டா சீனிவாசபூஜாரி (ஈடிகா) வகுப்பை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
புதியதாக பதவியேற்றுள்ள 17 பேரில் அஷ்வத் நாராயண், சசிகலா ஜோள்ளே, ஜே.சி.மாதுசாமி, பிரவு சவுஹான் ஆகிய நான்கு பேரை தவிர மற்ற 13பேர் ஏற்கனவே பாஜ ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள். மேலும் 17 பேரில் 15 பேர் பாஜ சார்பில் சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். கோட்டா சீனவாசபூஜாரி சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார். கோலார் மாவட்டம், முல்பாகல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற எச்.நாகேஷ் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார். அமைச்சரவையில் இன்னும் 13 இடங்கள் காலியாகவுள்ளது.
பதவி கிடைக்காதவர்கள் போர்க்கொடி
எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்த்த மூத்த எம்எல்ஏகள் ஏமாற்றமடைந்துள்ளனர். முன்னாள் சபாநாயகர் கே.ஜி.போபையா, முன்னாள் அமைச்சர்கள் முருகேஷ் நிராணி, சி.எம்.உதாசி, எஸ்.ஏ.ராமதாஸ், எம்.பி.ரேணுகாச்சார்யா, உமேஷ்கத்தி, ராஜுகவுடா, சிவனகவுடா நாயக், பசவராஜ் பாட்டீல் ஆர்.யத்னால், கருணாகரரெட்டி, பாலசந்திர ஜாரகிஹோளி, சுனில்குமார், அபய்பாட்டீல், கட்சியில் செல்வாக்கு மிக்க எம்எல்ஏகளாக கருதப்படும் எஸ்.ஆர்.விஷ்வநாத், பூர்ணிமா, ஏ.எஸ்.பாட்டீல் நடவள்ளி, ஆனந்த் மாமனி, தாத்தாத்ரேயா பாட்டீல் ரேவூர உள்பட பலர் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்காததால், கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளனர். சில எம்எல்ஏகள் தங்கள் ஆதரவாளர்களுடன் இப்போதே ஆலோசனை தொடங்கியுள்ளனர்.