ரூ354 கோடி வங்கிக் கடன் மோசடி விவகாரம்: ம.பி. முதல்வரின் மருமகன் கைது....தந்தை, தாய் உட்பட 5 பேர் மீதும் வழக்கு
8/20/2019 3:46:07 PM
புதுடெல்லி: வங்கியிடம் கடன் பெற்று ரூ. 354 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக கூறி, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருமகனை சிபிஐ இன்று ைகது செய்தது. இவ்வழக்கில் முதல்வரின் மருமகன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர் பேர வழக்கிலும் அவர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடியில், அதிமுக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்தியாவைச் சேர்ந்த சிலருக்கு பல கோடி ரூபாயை அந்த நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்ட ராஜீவ் சக்சேனா, கடந்த ஜனவரியில் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். டெல்லி வந்த அவரை, அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அவருக்கும், ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கும் இடையேயான வர்த்தகத் தொடர்புகளை ஆய்வு செய்து, அந்த நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் கடந்த ஜூலை 24ம் தேதி சோதனை நடத்தினர். மேலும், இடைத்தரகராகச் செயல்பட்டு பணத்தை பெற்றுத் தந்ததாக கிறிஸ்டியன் மிஷெல், ரதுல் புரி (46) ஆகியோர் மீது அமலாக்கத்துறைக்கு சந்தேகம் வந்தது. இதுதொடர்பாக, ரதுல் புரியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.
இவர்களில் ரதுல் புரி, மத்திய பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத்தின் நெருங்கிய உறவினர். அதாவது, ரதுல் புரியின் தந்தையான மோசர் பேர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் தீபக் புரி, மற்றொரு இயக்குனரான அவரது தாயான நீதா புரி (கமல்நாத்தின் சகோதரி) ஆவர். கமல்நாத்துக்கு ரதுல் புரி மருமகன் என்ற முறையில் உறவினராகிறார். குறுந்தகடுகள், டிவிடி, மின்னணு தகவல் சேமிப்பு உபகரணங்களைத் தயாரித்து வந்த மோசர் பேர் நிறுவனம், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட சில வங்கிகளில் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து கடன் வாங்கியுள்ளது. ஆனால், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
மேலும், அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தாததால், வங்கிக்கு ரூ.354 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மோசர் பேர் நிறுவனத்தின் இயக்குனர்கள், போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியிடம் இருந்து கடன் வாங்கியதாகவும், வாங்கிய கடனை தங்கள் சொந்த பயன்பாட்டுக்குச் செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா அளித்த புகாரின் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன் ரதுல் புரி, தீபக் புரி, நீதா புரி, சஞ்சய் ஜெயின், வினீத் சர்மா ஆகிய 5 பேர் மற்றும் மோசர் பேர் நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
மோசர் பேர் நிறுவனத்தின் அலுவலகம், ரதுல் புரி உள்ளிட்டோருக்குச் சொந்தமான வீடுகள் என மொத்தம் 6 இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், ரூ.1,350 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையே, முன்ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ரதுல் புரி மனு தாக்கல் செய்தார். ஆனால், இம்மனு கடந்த 6ம் தேதி முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டது. அதனால், ரதுல்புரி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை வங்கி மோசடி தொடர்பான புகாரில், ரதுல் புரியை டெல்லி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக ரதுல் புரி, மோசர் பேர் நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து கடந்த 2012ம் ஆண்டு விலகி விட்டார். அந்த நிறுவனம் தற்போது செயல்பாட்டில் இல்லை. தற்போது வங்கி மோசடி வழக்கில் கைதாகி உள்ள ரகுல் புரி, ஏற்கெனவே, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில் அமலாக்கத் துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை வலையத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.