காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் தண்ணீர் திறந்தார்
8/13/2019 3:37:35 PM
சேலம்: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும், மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால், பருவமழையை எதிர்நோக்கி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் பெரும்பாலான ஆண்டுகள் நீர்வரத்தும், இருப்பும் திருப்தி கரமாக இல்லாத காரணத்தால் தாமதமாகவே திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நடப்பாண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப் படவில்லை.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி இரு அணைகளிலிருந்தும் விநாடிக்கு 3 லட்சம் கனஅடி வரை நீர் காவிரியில் வெளியேற்றப் பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 101.22 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 66.23 டிஎம்சியாக உள்ளது.
இதையடுத்து, இன்று காலை 86வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டு தாமதமாக இன்று காலை திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையின் வலது கரையின் மின்விசை மூலம் அணையின் மேல் மட்ட மதகுகளை உயர்த்தி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். துவக்கத்தில் விநாடிக்கு 3000 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர், படிப்படியாக விநாடிக்கு 10,000 கனஅடி வரை அதிகரிக்கப்படுகிறது. இன்று திறக்கப்பட்ட தண்ணீர் ஜனவரி 28ம் தேதி வரை டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்ணீர் திறப்பின்போது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப் பண்ணன், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து டிசம்பர் 15ம் தேதி வரை கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டில் தாமதமாக இன்று மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் 200 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர், படிப்படியாக ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்கப்படுகிறது.
4 நாட்களில் 44 அடி உயர்வு
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து, கடந்த 10ம் காலை 57.16 அடியாக இருந்த நீர்மட்டம், 11ம் தேதி காலை 67.40 அடியாகவும், 12ம் தேதி காலை 82.62 அடியாகவும் உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.22 அடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் 44.06 அடி வரை உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் மேட்டூர் அணை நிரம்பும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
460 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அணை யின் மின்நிலையம் மூலம் விநாடிக்கு 50 மெகாவாட் மின்சாரம், சுரங்க மின்நிலையம் மூலம் விநாடிக்கு 200 மெகாவாட் மின்சாரம், செக்கானூர், நெறிஞ்சிப்பேட்டை, குதிரைக்கல் மேடு, ஊராட்சிக்கோட்டை, கோனேரிப்பட்டி கதவணைகள் உள்பட 7 கதவணைகள் மூலம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது.
65வது ஆண்டாக 100 அடியை எட்டியது
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் உபரிநீர் போக்கி பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், விவசாயிகளும் மலர் தூவி, அதிகாலையில் சிறப்பு பூஜை செய்து காவிரிக்கு நன்றி தெரிவித்தனர். 65வது ஆண்டாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.