கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை அடித்துக் கொன்று வனப்பகுதியில் சடலம் வீச்சு.. மனைவி கைது
8/8/2025 3:25:01 PM
திருமலை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை அடித்துக்கொன்ற மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். தமிழக-ஆந்திர எல்லையான கோட்டூர் அருகே வனப்பகுதியில் வாலிபர் சடலம் வீசப்பட்டு இருந்தது. அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர மாநிலம் குடுபல்லி போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:சடலமாக மீட்கப்பட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பி.ஜி.துர்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. குழந்தைகள் இல்லாததால் அதே கிராமத்தை சேர்ந்த விஜயம்மா என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
ஈஸ்வரன் தொடர்ந்து மது அருந்திவிட்டு விஜயம்மாவுடன் தகராறு செய்வாராம். இதனால் மனவேதனையில் இருந்த விஜயம்மாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து விஜயம்மா தன்னிடம் இருந்த ₹5 லட்சத்தை சத்தியமூர்த்திக்கு கடனாக வழங்கினார். அதன்பிறகு சத்தியமூர்த்தியும் விஜயம்மாவும் அடிக்கடி சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சந்திப்பு அவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். இதையறிந்த ஈஸ்வரன், தனது மனைவி விஜயம்மாவை கண்டித்துள்ளார். இதனால் தம்பதியிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் விஜயம்மா கொடுத்த பணத்தை தரும்படி சத்தியமூர்த்தியிடம் ஈஸ்வரன் கேட்டு வந்துள்ளார்.
கள்ளக்காதலுக்கு இடையூறாகவும், கொடுத்த பணத்தை கேட்டு தொல்லை செய்வதாலும் ஈஸ்வரனை கொலை செய்ய விஜயம்மாவும், சத்தியமூர்த்தியும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த மாதம் 20ம்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வனப்பகுதியில் மது அருந்தலாம் எனக்கூறி சத்தியமூர்த்தி, விஜயம்மா ஆகியோர் ஈஸ்வரனை அழைத்து வந்தனர். இருவரும் சேர்ந்து ஈஸ்வரனுக்கு அதிகளவு மது கொடுத்துள்ளனர். போதை அதிகமானதும் மயங்கி விழுந்த ஈஸ்வரனை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் ஈஸ்வரனின் முகத்தை அடையாளம் தெரியாத வகையில் கற்களால் தாக்கி சிதைத்து, சடலத்தை கோட்டூர் அருகே வனப்பகுதியில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து, விஜயம்மா, சத்தியமூர்த்தி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தோம். இவ்வாறு போலீசார் கூறினர்.