வடமாநில வாலிபரை தாக்கி பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 3 பேர் கைது
8/8/2025 2:49:16 PM
பெரம்பூர்: வடமாநில வாலிபரை தாக்கி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். வடமாநிலத்தை சேர்ந்தவர் சல்மான் (27). இவர், பெரம்பூர், வீனஸ் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, புளியந்தோப்பு பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு டீ குடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் வந்த 3 பேர் திடீரென சல்மானை மடக்கி சரமாரி தாக்கிவிட்டு பணத்தை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து சல்மான் கொடுத்த புகாரின்படி புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவன் மற்றும் அயனாவரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (19), சந்தோஷ் (19) ஆகியோரை கைது செய்தனர்.
3 பேரும் புளியந்தோப்பு, வேப்பேரி மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். வேப்பேரி காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது. அண்ணாநகர் பகுதியில் 23 கிராம் பிரேஸ்லெட்டுகள், செல்போன் ஆகியவை வழிப்பறி செய்ததும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து பைக், பிரேஸ்லெட்கள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 2 பேரை புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.