‘கொலை குற்றமா செய்து விட்டேன்’ முதல்வர் மீது மணிகண்டன் குற்றச்சாட்டு: பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ஆவேசம்
8/8/2025 2:04:19 PM
மதுரை: ‘நான் என்ன கொலை குற்றமா செய்து விட்டேன்’ என அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் ஆவேசமாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏ டாக்டர் மணிகண்டனை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி கவர்னர் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும், மணிகண்டனுக்கும் மோதல் ஏற்பட்டதால்தான், அவரது பதவி பறிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இது குறித்து ராதாகிருஷ்ணன் மீது அவர் குற்றசாட்டு தெரிவித்த சில மணி நேரங்களில் அவரது பதவி பறிக்கப்பட்டது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது: நான் அதிமுகவிற்கு உண்மையாக உழைத்திருக்கிறேன். ஆட்சிக்கு பக்கபலமாக இருக்கிறேன். அமைச்சர் பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டது நேற்றிரவு 9.45 மணிக்குத்தான் தெரிந்தது. அப்போது நான் ராமநாதபுரத்தில் இருந்தேன். இங்கு கூட்டுறவு வங்கி தேர்தல் தொடர்பாக பிரச்னை இருந்ததால், அதை முடித்து கொடுத்து விட்டு இரவோடு இரவாக சென்னை புறப்பட்டு வந்தேன்.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் அளவுக்கு நான் என்ன தவறு செய்து விட்டேன்? எனது பேட்டி தொடர்பாக என்னிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை. நான் கடுமையாக உழைத்ததால்தான் பரமக்குடி இடைத்தேர்தலில் அதிமுக ஜெயிக்க முடிந்தது. எம்.பி தேர்தலுக்கும் தீவிர பிரசாரம் செய்தேன். தமிழகம் முழுவதும் அதிமுக தோற்றதால் இங்கும் தோற்றது. என்னை நீக்கியது மனவேதனை அளிக்கிறது.
எனது தந்தை காலத்திலிருந்தே அதிமுகவிற்காக உழைத்து கொண்டிருக்கிறேன். 1987ம் ஆண்டு அதிமுகவில் உறுப்பினரானேன். எனது தந்தை 1972ம் ஆண்டு முதலே அதிமுகவில் உள்ளார். எனது தாத்தா 1957ம் ஆண்டில் இருந்தே திமுக உறுப்பினர். எங்களது குடும்பமே அரசியல் குடும்பம்தான். எனது பேட்டி குறித்து முதல்வர், என்னிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சத்துணவில் காலை உணவு கொடுக்கும் திட்டம் ஆய்வில் உள்ளது என்று ஓராண்டுக்கு முன்பு பேசினேன். சிறிது நேரத்தில் என்னை போனில் தொடர்பு கொண்ட முதல்வர், அப்படி பேசக்கூடாது, ஜெயலலிதா இருக்கும் போதே அதிக செலவாகும் என்பதால் காலை உணவு திட்டம் வேண்டாம் என கைவிடப்பட்டது என்று தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறோமே என்றேன். அதற்கு அவர், இது பற்றி பேசாதீர்கள், விட்டுவிடுங்கள் என்றார்.
அதே போல் தற்போது, எதற்காக இப்படி பேசினீர்கள் என்று கேட்டிருக்கலாம். அமைச்சர் பதவியில் இருந்து நீக்க, நான் என்ன கொலை குற்றமா செய்து விட்டேன்? இல்லை கொள்ளையடித்து விட்டேனா? கஞ்சா, குட்கா, பான்பராக் விற்றேனா? கட்சியை விட்டு வேறு எங்கும் போகமாட்டேன். முதல்வரை சந்தித்து எனது தரப்பு நியாயத்தை விளக்குவேன். என்னை நீக்கியது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அனைத்து அமைச்சர்களும் வருத்தத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மணிகண்டன் திடீர் குற்றச்சாட்டு தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பதவி பறிக்கப்பட்டாலும், அவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்படவில்லை.
அவர் தொடர்ந்து மாவட்ட செயலாளராக உள்ளார். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது முதல்வர் மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ள மணிகண்டன், போர்க்கொடி தூக்குவாரா இல்லை அடங்கிப்போவாரா என்பதுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.