இந்து அறநிலையத் துறையில் 44 ஆய்வாளர்கள் இட மாற்றம்: ஆணையர் நடவடிக்கை
7/22/2019 4:31:45 PM
நெல்லை: இந்து சமய அறநிலையத்துறையில் 44 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறையில் சமீபத்தில் கண்காணிப்பாளர் நிலையில் உள்ளவர்களில் தகுதியுடைய சிலருக்கு இடமாறுதல் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஆய்வர் நிலையிலான இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கடலூர் தலைமை எழுத்தர் சாந்தி விழுப்புரம் உதவி ஆணையர் அலுவலக தலைமை எழுத்தராகவும் திருவண்ணாமலை தலைமை எழுத்தர் ஜெயந்தி அதே பகுதியில் ஆய்வாளராகவும், திருவண்ணாமலை ஆய்வர் தேவராஜ் திட்டக்குடி ஆய்வராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மதுரை வடக்கு ஆய்வர் சுந்தரி மதுரை சுந்தரேஸ்வரர் கோயில் அயற்பணி ஆய்வராகவும் மாற்றப்பட்டுள்ளார். சென்னை ஆய்வர் வட்டம் 6 கலைச்செல்வி கும்மிடிப்பூண்டி ஆய்வராகவும், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் அயல் பணி ஆய்வர் கோவிந்தசாமி ஈரோடு உதவி ஆணையர் அலுவலக தலைமை எழுத்தராகவும், கிருஷ்ணகிரி ஆய்வர் சந்தியா லால்குடி ஆய்வராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல் நாகர்கோவில் கிழக்கு ஆய்வர் ஆனந்த், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அயற்பணி ஆய்வாளராகவும், கோவை மேற்கு ஆய்வர் சேகர் பழனி தண்டாயுதபாணி கோயில் அயற்பணி ஆய்வாளராகவும், சென்னை வட்டம் 2 ஆய்வர் வாசுகி திருவள்ளூர் ஆய்வாளராகவும், நெல்லை உதவி ஆணையர் அலுவலக தலைமை எழுத்தர் ரோகிணி திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் அயற்பணி ஆய்வாளராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் 44 ஆய்வாளர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொதுநலன் மற்றும் நிர்வாக நலன் கருதி இந்த மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாறுதல் செய்யப்பட்ட ஆய்வர்களை தக்க மாற்று ஏற்பாடுகள் செய்து உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க தொடர்புடைய சார்நிலை அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.