காதல் திருமணம் செய்த இளம்பெண் கோர்ட்டில் ஆஜர்
6/27/2019 3:58:48 PM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் கணவருடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். மோதல் சம்பவம் ஏதும் நிகழாமல் இருக்க இருவரது கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த நெசல் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் அரவிந்த்குமார் (26). டிப்ளமோ சிவில் இன்ஜினியர். இவரும், அருகில் உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்த ரவி மகள் நந்தினி என்கிற பச்சையம்மாள் (20) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 24ம் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி வந்தவாசியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.
இதற்கிடையில் பெண்ணின் பெற்றோர் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் பச்சையம்மாளை அரவிந்த்குமார் கடத்தி சென்றதாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். காதல் ஜோடி வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெண் வீட்டார் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் காதல் ஜோடி வழக்கறிஞர் மூலமாக திண்டிவனம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அப்போது பச்சையம்மாள் என்னை யாரும் கடத்தவில்லை, நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நான் கணவருடன் வாழ விரும்புகிறேன் என கூறினார். மேலும் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதை தொடர்ந்து காதல் ஜோடிக்கு பாதுகாப்பு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 2 பேரும் நெசல் கிராமத்தில் உள்ள அரவிந்த்குமார் வீட்டிற்கு சென்றனர். இதனிடையே இருசமூகத்தினர் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க மாத்தூர், நெசல் கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.