ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தஞ்சையில் நாளை முதல் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
6/27/2019 3:54:42 PM
மன்னார்குடி: தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அழிவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் அபாயம் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இந்த திட்டத்தை கைவிடக்கோரியும் டெல்டாவில் விவசாயிகள் தினமும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 23ம் ேததி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் துவங்கி ராமேஸ்வரம் வரை சுமார் 600 கி.மீ தூரம் அதிமுக, பாஜ தவிர்த்து, அனைத்து கட்சிகள் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
இந்நிலையில், டெல்டாவில் மேலும் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க மத்திய அரசிடம் வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதுவிவசாயிகளை மேலும் கொந்தளிப்படைய வைத்துள்ளது. இந்நிலையில் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் உயர்மட்ட ஆலோசனைக்குழு கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் காவிரிப் பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி அதனை சட்டமாக்கக் கோரி நாளை (28ம் தேதி) முதல் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது. நாளை நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி டெல்டா மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி மயிலாடுதுறையில் மாநாடு நடைபெற உள்ளது. கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை வகிக்கிறார். ஏற்கனவே இந்த மாநாட்டிற்கு போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த மாநாடு நடைபெற உள்ளது.