தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது சென்னையில் மேலும் 3 நாட்கள் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
6/27/2019 2:53:18 PM
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து கேரளாவில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவை ஒட்டிய தமிழக எல்லைப்பகுதிகளில் சில இடங்களிலும், உள் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேலத்தில் 28.4 மி.மீட்டர் மழை பெய்தது. இதேபோல், வால்பாறை, பரங்கிபேட்டை, குன்னூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளிலும் மழை பொழிந்தது.
சென்னையில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை முதல் இரவு முழுவதும் சில பகுதிகளில் மிதமான மழையும் சாரல் மழையும் பெய்தது. குறிப்பாக, அண்ணாநகர், கிண்டி, அசோக்நகர், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், தி.நகர், ராயப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, எழும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 9.5 மி.மீட்டர் மழை பதிவானது. இதைத்தொடர்ந்து சென்னையில் மேலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பத்தின் அளவு 26 டிகிரி முதல் 35 டிகிரி வரை பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.