இரிடியம் தருவதாக பல லட்சம் மோசடி கும்பல் தலைவனை பிடிக்க சென்னை பெங்களூருக்கு தனிப்படை விரைவு
6/26/2019 4:38:42 PM
சேலம்: சேலத்தில் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட கும்பல் தலைவனை பிடிக்க, சென்னை, பெங்களூரில் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். சேலம் அம்மாப்பேட்டை என்ஜிஜிஓ காலனியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது நண்பர் ஸ்டாலின். இவர் மூலம் சென்னையை சேர்ந்த மதன் என்பவர் பிரவீன்குமாருக்கு பழக்கமானார். அப்போது தங்களிடம் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாகவும், அதனை ₹250 கோடிக்கு விற்பனை ெசய்யலாம் எனவும் மதன் தரப்பினர் கூறியுள்ளனர். இதனையடுத்து, முதல் தவணையாக ₹25 லட்சமும், அதன்பின்னர் ₹30 லட்சமும் என மொத்தம் ₹55 லட்சத்தை பிரவீன்குமார், மதன் தரப்பினரிடம் கொடுத்துள்ளார். இதனிடையே இரிடியம் உள்ள பெட்டியை திறக்க, பிரத்யேகமான நவீன உடை வேண்டுமென தெரிவித்த மதன், இதற்காக மேலும் பல லட்சம் பணம் வேண்டுமென கேட்டுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பிரவீன்குமார், சேலம் மாநகர போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில், மதன் தலைமையில் ஆந்திரா மற்றும் சென்னையை சேர்ந்த 6 பேர் அடங்கிய கும்பல், இரிடியம் இருப்பதாக கூறி இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மோசடி கும்பலில் இருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அங்கம் தாதாஜி, சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சரவணன், சென்னை ராயபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் நெற்குன்றத்தை சேர்ந்த சிவக்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். கும்பல் தலைவனான மதன் மற்றும் அவனது கூட்டாளி ராம்பிரசாத் தலைமறைவாகினர். கும்பல் தலைவன் மதனின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூராகும். ராம்பிரசாத் சேலத்தை சேர்ந்தவர். தற்போது மதன் சென்னையிலும், ராம்பிரசாத் பெங்களூரிலும் பதுங்கி யிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை, பெங்களூருக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.