பஸ் நிலையத்தில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்கார முயற்சி: போலீஸ்காரர் அதிரடி சஸ்பெண்ட்
6/26/2019 3:48:55 PM
திருமலை: தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் கடம்ப் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் நிர்மலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்றிரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக நிர்மல் பஸ் நிலையத்திற்கு வந்தார். ஆனால் தங்கள் கிராமத்திற்கு செல்லும் கடைசி பஸ் சென்று விட்டது தெரிய வந்தது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் பஸ் நிலையத்திலேயே அமர்ந்திருந்தார். நீண்ட நேரமாக இருந்த அந்த பெண்ணை பார்த்த ஒரு கும்பல், அவரிடம் கேலி, கிண்டல் செய்துள்ளனர். தவறாக நடக்க முயன்றதாகவும் தெரிகிறது.
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த குற்றப்பிரிவு போலீஸ்காரர் கங்காதர் அங்கு விரைந்து வந்தார். இதை பார்த்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் அருகில் அமர்ந்த போலீஸ்காரர் கங்காதர் ஆதராக பேசியுள்ளார். பின்னர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதாக கூறி தனது பைக்கில் இளம்பெண்ணை அழைத்துச் சென்றார். அப்பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்துள்ளார். அங்கு வைத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனிடையே போலீஸ்காரர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் பஸ் நிலையத்தில் இருந்த அப்பகுதியினர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் காவலர்கள் யாரும் வராததால் புகார் தெரிவித்தவர்களே நேரடியாக அந்த அறைக்குச் சென்று கங்காதரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய எஸ்.பி. சசிதர்ராஜு காவலர் கங்காதரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.