கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடுவால் கட்டப்பட்ட ‘பிரஜா வேதிகா’ அரண்மனை கட்டிடம் இடிப்பு: பாதுகாப்பு வாபஸ்சை தொடர்ந்து அடுத்த நடவடிக்கை
6/26/2019 2:41:07 PM
அமராவதி: கிருஷ்ணா நதிக்கரையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடம், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உத்தரவின்படி நேற்றிரவு இடிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்குச் சொந்தமான ‘பிரஜா வேதிகா’ எனும் அரண்மனை போன்ற கட்டடம், கிருஷ்ணா நதிக்கரையில் கட்டப்பட்டது. சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த காலகட்டத்தில் அவர் மக்களைச் சந்திக்கும் மாளிகையாக பயன்படுத்தப்பட்டது. மேலும் தெலுங்கு தேசம் கட்சி சார்ந்த நடவடிக்கைகளும் இந்த மாளிகையில் இருந்துதான் எடுக்கப்பட்டன. 2017ல் கிருஷ்ணா நதிக்கரையில் தனது வீட்டின் அருகிலேயே சந்திரபாபு நாயுடு இந்த மாளிகையை கட்டியதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இந்த கட்டிடம் கட்டியதில் உள்ேநாக்கமும், விதிமீறலும் இருப்பதாக கூறி, ஒய்எஸ்ஆர்சி கட்சியைச் சார்ந்த மங்கலகிரி அல்ல ராமகிருஷ்ண ரெட்டி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘பிரஜா வேதிகா மாளிகை மட்டுமல்ல அதனருகில் கட்டப்பட்டிருக்கும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் வீட்டையும் சேர்த்து அங்கு இடம்பெற்றிருக்கும் பல மாளிகைகள் சட்டத்திற்குப் புறம்பாக விதிமீறல்களுடன் கட்டப்பட்டவை; எனவே அவற்றை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கு இன்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி, சர்ச்சைக்குரிய பிரஜா வேதிகா மாளிகையை இடிக்க கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டார். அப்போது, ‘கிருஷ்ணா நதிக்கரையில் நாயுடுவுக்குச் சொந்தமான கட்டிடங்கள் மட்டுமின்றி, பல வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மாளிகைகள், அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வீடுகள், மிகப்பிரமாண்டமான நேச்சர் க்யூர் மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லம் ஆகியன சட்டத்திற்கு புறம்பாகக் கட்டப்பட்டுள்ளன; அதனால் எல்லாவற்றையும் இடிக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார். முன்னதாக கடந்த திங்களன்று பிரஜா வேதிகா மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான சந்திப்பை நடத்திய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ‘இந்த மாளிகையில் நிகழும் கடைசி நிகழ்வாக இது அமையலாம். ஏனெனில் கிருஷ்ணா நதிக்கரையில் சட்டத்திற்குப் புறம்பாக விதிமீறல்களுடன் கட்டப்பட்ட கட்டிடப் பட்டியலில் இதுவும் ஒன்று என்பதால் வரும் புதன்கிழமை முதல் இவற்றை இடித்து தரைமட்டமாக்கும் வேலை தொடங்கப்படவிருக்கிறது; இந்தக் கட்டிடங்களைக் கட்ட சுமார் 5 கோடி முதல் 8 கோடி ரூபாய் வரை அரசுப் பணம் செலவிடப்பட்டுள்ளது. ஆனாலும், இது நதிக்கரையை ஆக்ரமிக்கும் செயலாகக் கருதப்படுவதால் அரசு இதை இடிக்க உத்தரவிடுகிறது’ என்றார்.
இதற்கிடையே, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், பிரஜா வேதிகா கட்டிடத்தை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதை ஜெகன் மோகன் ரெட்டி அரசு நிராகரித்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்றிரவு முதல் விதிமுறை மீறி கட்டப்பட்டிருந்த பிரஜா வேதிகா கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது. ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். மிகப் பெரிய கட்டிடம் என்பதால், அதிலிருந்த பர்னிச்சர் பொருட்கள், ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் ஆகியவற்றை சிஆர்டிஏ அதிகாரிகள் நேற்று மாலை எடுத்துச் சென்றனர்.
ெதாடர்ந்து, நேற்றிரவு சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஜேசிபி இயந்திரங்களை கொண்டு 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பிரஜா வேதிகா கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதனால், ஆந்திரா மாநிலத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தற்போது கட்டிடம் இடிக்கப்பட்டதால், அதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது எனக்கூறி, அரசின் சார்பில் சந்திரபாபு நாயுடுக்கு எதிராக வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாலையில் மனு தள்ளுபடி: ஆந்திர மாநிலை தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் கூடுதல் ஆணையர் விஜய் கிருஷ்ணன் தலைமையில் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடந்தது. இதற்கிடையை கட்டிடத்தை தேவையின்றி இடிப்பதால், மக்கள் பணம் வீணாகிறது எனக் கோரி சமூக ஆர்வலர் பி.சீனிவாச ராவ் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்து, கட்டிட இடிக்கும் பணியை நிறுத்தக் கோரினார். இந்த மனுவை அதிகாலை 2.30 மணிக்கு நீதிபதிகள் சீதாராம மூர்த்தி, ஜி.ஷியாம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால் கட்டிடத்தை இடிக்க தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். முன்னதாக சந்திரபாபு நாயுடு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் ஊர் திரும்பிய நாயுடு: தற்போது, சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷூக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அவற்றை திரும்ப பெற்றுக் கொண்ட ஆந்திர அரசு தற்போது துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு அதிகாரிகளாக நியமித்துள்ளது. இதேபோல் அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளையும் ஆந்திர மாநில அரசு திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது. முன்னதாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடும்பத்துடன் சென்றிருந்த சந்திரபாபு நாயுடு, நேற்றிவு விஜயவாடா வந்தார். இந்நிலையில், அவர் கட்டிய அரண்மனை போன்ற கட்டிடம் இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.