ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மாயம் குமரி மீனவர்கள் 23 பேர் கதி என்ன?
6/25/2019 2:41:45 PM
கன்னியாகுமரி: சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து ஒற்றையால்விளை பகுதியை சேர்ந்த அருள்ராஜன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 23 பேர் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை சுமார் 4 மணிக்கு மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர். அவர்கள் இரவு 10 மணி ஆகியும் கரை திரும்பவில்லை. சரியான தகவல் தொடர்பும் இல்லாமல் இருந்ததால் மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் ஒயர்லெஸ் சிக்னல் கிடைத்தது. அப்போது அவர்கள் பேசும்போது, ‘’விசைப்படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறோம்’ என்று தெரிவித்தனர். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து இரவு 11 மணிக்கு பிறகு ஆனந்த் என்பவரது விசைப்படகில் 8 பேர் கொண்ட குழுவினர் அவர்களை தேடி ஆழ்கடலுக்கு சென்றனர்.
நடுக்கடலில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற பின்னரும் மாயமான படகை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது சுமார் 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் மாயமான விசைப்படகை ஆனந்த் என்பவரின் படகில் சென்றவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். மாயமான படகின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே 23 மீனவர்களின் கதியும் என்ன? என்பது தெரியவில்லை. ஒரே மர்மமாக உள்ளது. இருப்பினும் 23 மீனவர்களையும் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு சொந்தமான 3 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவுவதை கண்காணித்து தடுக்கவும், கடலில் மாயமாகும் அல்லது விபத்துக்குள்ளாகும் படகுகளையும், பாதிக்கப்படும் மீனவர்களையும் மீட்பதற்காவும் இந்த குழு அமைக்கப்பட்டு படகுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிநவீன, மின்னல் வேகத்தில் செல்லும் இந்த 3 படகுகளும் தற்போது பழுதாகி பயனற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் கடலில் சென்று மாயமான மீனவர்களை தேட முடியாத நிலை உள்ளது. தற்போது மாதம் ஒரு முறை சஜாக் ஆப்பரேஷன் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் பணியை மட்டும் இவர்களால் செய்ய முடிகிறது. ஆனால் மாயமாகும் மீனவர்களை தேடுவது, கடலில் மூழ்கி இறப்பவர்களின் உடலை கண்டுபிடிப்பது என எந்த பணியையும் செய்வதற்கான வசதிகள் இல்லை. ஆகவே தீவிரவாதிகள் ஊடுறுவல் போன்ற சம்பவங்கள் நடந்தால் கடலோர பாதுகாப்பு குழுமத்தினரால் எந்த தடுப்பு பணியும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இது குமரி மாவட்டத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், மீனவர்களுக்கு எந்த பயனும் இல்லாத நிலையையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர பதுகாப்பு குழுமத்தை நவீனப்படுத்தி, போதுமான அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து வசதிகளையும் முறையாக வழங்க வேண்டும் என்று மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
16 பேர் குழு விரைந்தது: கடலில் மாயமான மீனவர்களை தேடி ஆனந்த் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற 8 பேரும் கடலில் 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்களை தேடினர். ஆனால் அந்த பகுதியில் அவர்கள் இல்லை. இதையடுத்து சின்னமுட்டத்தில் இருந்து மேலும் 16 பேர் கொண்ட குழுவினர் மற்றொரு படகில் 35 நாட்டிகல் மைல் தொலைவுக்கு அப்பால் சென்று தேடும் வகையில் டீசல் மற்றும் அனைவருக்கும் தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களுடன் இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளனர்.