பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதம் இருக்கும் போதே ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ராஜினாமா
6/24/2019 2:34:58 PM
புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா, தனது பதவிக் காலம் முடிய 6 மாதம் இருக்கும் நிலையில், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதலால், அவர் தனது ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்த சில மாதத்தில், துணை கவர்னரும் ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுத் துறை வங்கிகளில் கடன் வழங்கியதில் நடந்த ஊழல்கள் மற்றும் வாராக் கடன் அதிகரிப்பு உள்ளிட்டவை காரணமாக, வாராக்கடன் சுமையால் தவிக்கும் வங்கிகளுக்குக் கடன் மறுப்பு, வங்கிக்கான வட்டி விகிதங்கள் உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசின் பரிந்துரையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து நிராகரித்து வந்தது. இதனால், தனியார் நிதி நிறுவனங்களுக்குப் பொதுத்துறை வங்கிகள் மூலம் பெரிய அளவில் கடன் கிடைப்பது குறைந்துபோனது. அந்த நிறுவனங்கள் பணப்புழக்கமின்றி தவித்து வருகின்றன.
கடந்த 2018 செப்டம்பரில், ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள நாச்சிகெட் மார் என்பவர், மத்திய அரசின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பதவிக்காலம் முடிவடைவதற்கு 2 ஆண்டுக்கு முன்னதாகவே, அந்தக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து அவருக்கு முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கவில்லை. இவ்வாறாக மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான மோதல் உச்சக் கட்டத்தை எட்டியதால், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அரசை வெளிப்படையாக குற்றம் சாட்டி பேசினார். அப்போது, ‘ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மத்திய அரசு மதிப்பதில்லை. இதற்கான விளைவுகள் விரைவிலோ சற்று தாமதமாகவோ தெரியவரும்; ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும்’ என்று தெரிவித்ததற்கு, ரிசர்வ் வங்கியின் ஊழியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்தது. இதற்கிடையே, தன்னாட்சி உரிமை கொண்டதாகச் சொல்லப்படும் ரிசர்வ் வங்கியின் மீது தனது பிடியை இறுக்குவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 7வது பிரிவைப் பயன்படுத்தியது.
இதுெதாடர்பாக, அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய அரசு சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில், ‘பொதுத் துறை வங்கிகள் கடன் வழங்கிய விவகாரத்தை அவ்வங்கி அதிகாரிகள் கையாண்ட விதம்; நிதிச் சந்தையில் நிலவும் இறுக்கமான பணப்புழக்கம் மற்றும் அதைப் போக்க அரசுத் தரப்பில் செய்த பரிந்துரைகள்’ ஆகியன குறித்தும் கருத்தைக் கேட்டது. இதனால் அதிருப்தியடைந்த உர்ஜித் படேல், 2018, டிசம்பர் மாதம் திடீரெனப் தனது பதவியில் இருந்து விலகினார். உடல் நலன் காரணமாக ராஜினாமா செய்வதாக அவர் கூறியிருந்தாலும், மத்திய அரசுடனான மோதலே காரணம் என்று கூறப்பட்டது. ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் யார் என்ற பரபரப்பு நிலவி வந்த நிலையில், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலராகப் பணியாற்றியபோது, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி அமலாக்கம் போன்றவற்றில் முக்கியப் பங்காற்றிய சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசுடன் இணக்கமாக நடந்து கொள்ளும் இவர் பதவியேற்ற பின், வாராக் கடன் பிரச்னையில் பொதுத்துறை வங்கிகளிடம் காட்டிய கெடுபிடிகளையும் ரிசர்வ் வங்கி குறைத்துக்கொண்டது. இவரது பதவிக்காலம் 2021, டிசம்பர் வரை உள்ளது.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜ தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிைய பிடித்ததால், ‘ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்கு ஆபத்தில்லை’ என்று ரிசர்வ் வங்கிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா, தனது பதவிக்காலம் இன்னும் 6 மாதம் இருக்கும் நிலையில், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவர், ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துக்கள் கூறியதால், தொடர்ந்து துணை கவர்னர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிதி அமைச்சகத்திலும் சிக்கல்
மத்திய நிதி அமைச்சகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளில் 12 உயர் அதிகாரிகளுக்கு, கட்டாய ஓய்வு கொடுத்து, அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் பணியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர். லஞ்ச ஊழல் புகார் மற்றும் செக்ஸ் புகார்கள் அடிப்படையில் அவர்கள் மீது இந்த நடவடிக்கையை நிதி அமைச்சகம் எடுத்துள்ளதாக கூறப்பட்டது. வருகிற ஜூலை 4ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதைத் தொடர்ந்து 5ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 12 அதிகாரிகள் நீக்கம், தன்னாட்சி உரிமம் கொண்ட அமைப்பான ரிசர்வ் வங்கியின் கவர்னர், துணை கவர்னர் ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலகல் ஆகிய நிகழ்வுகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
விரால் வி.ஆச்சார்யா யார்?
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக 2017 ஜனவரி 23 ஆம் தேதி விரால் வி.ஆச்சார்யா (42) பதவி ஏற்றுக் கொண்டார். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேலின் கீழ் பணியாற்றும் நான்கு துணை ஆளுநர்களில் ஒருவராக ஆச்சார்யா இணைந்தார். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருந்த ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டதை பலரும் பாராட்டினர். இவர், 2008ம் ஆண்டு ‘ரைசிங் ஸ்டார் இன் பைனான்ஸ்’ என்ற விருது பெற்றவர். தற்போது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவியை ராஜினாமா செய்ததால், நியூயார்க்கில் உள்ள என்ஒய்யூ பல்கலைகழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் பேராசிரியராக பணியில் சேர உள்ளார்.