அண்ணா அறிவாலயத்தில்: வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் மாலை நடக்கிறது
6/3/2025 4:43:13 PM
சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலையில் நடந்தது. கலைஞர் பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் மாலை நடக்கிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. திமுக மட்டும் 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் 3-வது மிகப்பெரிய கட்சி என்ற அந்தஸ்தையும் திமுக பெற்றுள்ளது.அதேபோன்று, 22 சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், திமுக எம்எல்ஏக்களின் பலம் சட்டமன்றத்தில் 101 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வரும் 17ம் தேதி மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 17ம் தேதி நடைபெறுகிறது. அதே நேரத்தில் விரைவில் தமிழக சட்டப்பேரவையும் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதில் திமுக எம்பி, எம்எல்ஏக்கள் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும். கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த எந்தெந்த பிரச்னைகளை எழுப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கவும், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிப்பதற்காகவும் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.அதில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் எம்பி, கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 4 மணியளவில் முத்தமிழறிஞர் கலைஞரின் 96வது பிறந்தநாள் விழா, தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஓ.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது.
இந்த பிரமாண்ட விழாவுக்கு திமுக பொது செயலாளர் அன்பழகன் தலைமை வகிக்கிறார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ வரவேற்புரையாற்றுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுக்கிறார்.இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் சுப.வீரபாண்டியன், பொன்.குமார், ஸ்ரீதர் வாண்டையார், எஸ்றா.சற்குணம், இனிகோ இருதயராஜ், முருகவேல்ராஜன், பி.வி.கதிரவன், அதியமான், கு.செல்லமுத்து, எர்ணாவூர் நாராயணன், திருப்பூர் அல்தாப், பஷீர் அகமது, பி.என்.அம்மாவாசி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். நிறைவாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விழா பேரூரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்னறனர்.