புழல் 22-வது வார்டில் நீர்தேக்க தொட்டியின் கீழே துருப்பிடித்த வாகனங்கள்
5/16/2019 3:23:21 PM
புழல்: புழல் 22-வது வார்டு காந்தி பிரதான சாலையில் மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதன் அடிப்பகுதியில் புழல் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனங்கள் துருப்பிடித்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனங்களை சுற்றிலும் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர் காடு போல் காட்சியளிக்கிறது. இதனால் அருகிலுள்ள வீடுகளுக்கு விஷ பூச்சிகள் ஊடுருவி வருகின்றன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், துருப்பிடித்த வாகனங்கள் மற்றும் குப்பைக் கழிவுகளை அகற்றுவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, துருப்பிடித்த வாகனங்களை ஏலத்தில் விடவும், தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.