ஜாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுப்பு கர்ப்பிணியாக்கி ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா
5/16/2019 3:18:15 PM
* சேலத்தில் சென்னை பெண்ணுக்கு கொடுமை
சேலம்: சேலம் அருகே கர்ப்பமாக்கி விட்டு, ஜாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், மேச்சேரி ஒன்றியம் காமனேரியை சேர்ந்தவர் மாரப்பன். இவரது மகன் லோகநாதன்(26). பொறியியல் பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்போது, அதே நிறுவனத்தில் பணி புரியும் சென்னை புழல் பகுதியை சேர்ந்த ஜாங்கர் மகள் பிரியா(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். நெருங்கி பழகியதன் விளைவாக, கடந்த ஜனவரி மாதம் பிரியா கர்ப்பமானார். லோகநாதன் வற்புறுத்தியதால், பிரியா கருவை கலைத்து விட்டார். பின்னர், திருமணம் செய்து கொள்ளும்படி பிரியா வற்புறுத்தியதால், கடந்த 1ம் தேதி அவரை ஓமலூருக்கு அழைத்து வந்த லோகநாதன், அவரை ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் தவிக்க விட்டு மாயமானார்.
இதையடுத்து, காதலன் வீட்டை தேடி சென்ற பிரியாவை, லோகநாதன் மற்றும் அவரது உறவினர்கள், ஜாதியை காரணம் காட்டி அவரை விரட்டியுள்ளனர். ஆனால், பிரியா செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், லோகநாதன், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து தாக்கியதில் பிரியா காயமடைந்தார். இதையடுத்து, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இதனிடையே, அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர், பிரியாவுக்கு உதவி செய்வதாக கூறி, லோகநாதன் தரப்பினரை மிரட்டி ரூ.1.50 லட்சம் பணத்தை வாங்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிரியா, காதலன் வீட்டிற்கு மீண்டும் சென்றார். அப்போது, லோகநாதன் தரப்பினர் அவரை அடித்து, வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிய பிரியா, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அவருக்கு அறிவுரை கூறி, சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டில் சேர்க்க மறுத்து விட்டதால், அதிர்ச்சியடைந்த பிரியா நேற்று மதியம் மீண்டும் மேச்சேரியில் உள்ள லோகநாதன் வீட்டிற்கு வந்து, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின், மேச்சேரி போலீசார் வந்து, பிரியாவிடம் விசாரணை நடத்தினர். பிரியாவின் புகார் மீது உரிய விசாரணை நடத்துவதாக உறுதியளித்த போலீசார், பிரியாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டில் சேர்க்க மறுத்து விட்டனர். பிரியா, காதலன் வீட்டிற்கு மீண்டும் சென்றார். அப்போது, லோகநாதன் தரப்பினர் அவரை அடித்து, வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்றனர்.