அவதார தினத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் தேர் திருவிழா
5/8/2025 5:40:43 PM
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜரின் 1002-வது அவதார உற்சவ தினத்தை முன்னிட்டு இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் ராமானுஜர் வீதியுலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு, கடந்த மாதம் 19ம் தேதி கொடியேற்றம் துவங்கியது. முதல் பத்து நாட்கள் சிம்மம், சேஷம், ஹம்ச வாகனம், தங்க பல்லக்கு, யாளி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மலர் அலங்காரத்தில் ஸ்ரீஆதிகேசவ பெருமாளின் வீதியுலா நடைபெற்றது. 7-ம் நாள் தேர் திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதையடுத்து, கடந்த 30ம் தேதி ஸ்ரீ ராமானுஜரின் 1002வது ஆண்டு அவதார திருவிழா துவங்கியது. வரும் 10ம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழாவில், உற்சவர் ஸ்ரீராமானுஜர் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று காலையில் தங்க பல்லக்கில் உற்சவர் ராமானுஜர் தேரடி வரை வந்து, பின்னர் மலர் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா நடைபெற்றது. காந்தி சாலை, திருவள்ளூர் சாலை, திருமங்கை ஆழ்வார் சாலை வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழிநெடுகிலும் அன்னதானம், மோர், இளநீர் ஆகியவற்றை பக்தர்கள் வழங்கினர்.