பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் தேர்தல் விதிகளை மீறிய ராமநாதபுரம் கலெக்டர்?
4/30/2019 4:13:40 PM
ராமநாதபுரம்: தேர்தல் விதிகளை மீறி ராமநாதபுரம் கலெக்டர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம்(தனி), சூலூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்கு மே 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள், ஆய்வுகூட்டம், குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தக்கூடாது. பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட, பொதுப்பிரசனைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்க வேண்டுமென்றால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் மனுக்களை போட வேண்டும் என விதிமுறை உள்ளன.
இந்த நிலையில், பொதுமக்கள் குடிநீர் பிரசனை, பயிர் காப்பீடு, பட்டா வழங்க கோரி உள்ளிட்ட மனுக்களோடு ராமநாதபுரம் கலெக்டர் சேம்பர் முன் நேற்று காத்திருந்தனர். கலெக்டர் அலுவலக அதிகாரிகள், பொதுமக்கள் ஒவ்வொருவரையும் கலெக்டரை சந்திக்க அனுமதித்தாக தெரிகிறது. முக்கியமாக, காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை கலெக்டர் வீரராகவராவ் மனு வாங்கியதாகவும், மனுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து விளக்கம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் விதிமுறை அமலில் உள்ள நிலையில் கலெக்டர் மனுக்களை பெற்ற விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில்,‘‘தேர்தல் விதிமுறைகளை மீறி ராமநாதபுரம் கலெக்டர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும்’’ என்றார்.