8 வழிச்சாலையால் விவசாய நிலம் பறிபோவதால் மண்ணை வாரி வீசி குமுறலை வெளிப்படுத்திய பெண்கள்
2/19/2019 3:15:07 PM
செங்கம்: சென்னை, சேலம் எட்டு வழிச்சாலையில் விவசாய நிலத்தை பறிகொடுத்த பெண்கள், மண்ணை அள்ளி வீசி மனகுமுறலை வெளிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலைக்கு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு அளவீடு செய்து, குறியீடு கற்கள் பதிக்கப்பட்டது. இந்த நிலையில், செங்கம் தாலுகாவில் 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் ஏற்கனவே 4 கட்டங்களாக நடந்தது. அப்போது விவசாயிகள், ‘’தங்களது வாழ்வாதாரமான நிலங்களை 8 வழிச்சாலை திட்டத்திற்கு வழங்க மாட்டோம்’’ என்றனர்.
இந்த நிலையில், 5ம்கட்ட கருத்துக்கேட்பு கூட்டம் செங்கம் பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. சிறப்பு டிஆர்ஓ வெற்றிவேல் தலைமை தாங்கினார். மதியம் 12 மணியளவில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி, செங்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக சென்றனர். பின்னர், கருத்துக் கேட்பு கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய விவசாயிகள் கூறுகையில், `நாங்கள் எழுத்துபூர்வமாக சில சந்தேகங்கள், குறைகளை குறித்து அதிகாரிகளிடம் கேட்டோம். ஆனால் விளக்கம் அளிக்கவில்லை. போலீசை வைத்து மிரட்டி பணிய வைக்க முயற்சி நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் எங்களை சந்திக்கவில்லை. எனவே, கருத்துக்கேட்பு கூட்டத்தை புறக்கணித்தோம்’’என்றனர். இதன்பின்னர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது விவசாய குடும்பங்களை சேர்ந்த சில பெண்கள் மண்ணை வாரி தூவியபடி, சாபம் விட்டுக்கொண்டே சென்றனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, சிறப்பு டிஆர்ஓ வெற்றிவேலிடம் கேட்டபோது, ‘அவர்களுக்கு கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை. அதனால் குறை கூறிவிட்டு செல்கின்றனர்’ என்றார்.