கொடைக்கானல் காவல்நிலைய வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட் ஆஜர்
2/19/2019 3:12:24 PM
வேலூர்: கொடைக்கானல் காவல்நிலைய தாக்குதல் வழக்கு சம்பந்தமாக பெண் மாவோயிஸ்ட், திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய வழக்கு, கொடைக்கானலில் ஆயுதப்பயிற்சி பெற்றது உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்ட் ரீனா ஜாய்ஸ்மேரி சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை அடுத்த படப்பை எருமையூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த போது கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கொடைக்கானலில் 2008ம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்காக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரீனாஜாய்ஸ்மேரி பிப்ரவரி 4ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரீனா ஜாய்ஸ்மேரியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று அழைத்துச்சென்றனர். ‘’ திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று ரீனாஜாய்ஸ்மேரியை ஆஜர்படுத்த உள்ளோம்’’ என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.