திருவள்ளூர் ஆடிட்டர் வீட்டில் கொள்ளை போன 200 பவுன் நகையை மீட்க முடியாமல் போலீசார் திணறல்
2/19/2019 3:03:22 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் ராஜாஜிபுரம் பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (69). ஆடிட்டர். இவரது மனைவி ரஜிதா (60). இவர்கள் கடந்த ஆண்டு மே 22ம் தேதி படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, முகமூடி அணிந்த 7 பேர் கும்பல், கதவை உடைத்து, தம்பதியை கயிற்றால் கட்டி, பீரோவில் இருந்த 200 சவரன் நகைகள், விலை உயர்ந்த 2 செல்போன்கள், 2 வாட்சுகள், ஒரு லட்சம் மதிப்பிலான மூக்கு கண்ணாடி ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு, ரூ.8 லட்சம் மதிப்பிலான காரையும் எடுத்து கொண்டு தப்பினர். இதில், கார் மட்டும் ஊத்துக்கோட்டை அருகே ஏரிக்கரையில் மீட்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, மகாராஷ்டிர மாநிலம் ராம்பூர் பகுதியை சேர்ந்த செல்லையா (40), சிவா (30), கோவிந்த் (30) ஆகியோரை அம்மாநில போலீசாரின் உதவியுடன் பிடித்தனர். அவர்களை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ததில், நகை, பணத்தை அவர்களது கூட்டாளிகளிடம் கொடுத்துள்ளதாக தெரியவந்தது.
இதையடுத்து, சிறு திருட்டுகளில் ராம்பூர் கிளை சிறையில் இருந்த 4வது குற்றவாளியான சோம்நாத் மதுக்கர் சோப் (31) என்பவனை, போலீசார் காவலில் எடுத்து வந்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, 5 நாள் காவலில் விசாரித்தனர். இதில் அவனிடம் கொள்ளை போன நகைகள் இல்லை என்பது தெரிந்தது. இந்நிலையில், இக்கொள்ளை சம்பவத்தில் மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அதுகுறித்த விசாரணையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பவம் நடந்து 9 மாதங்களுக்கு மேலாகியும், கொள்ளைபோன 200 சவரன் நகைகள் யாரிடம் உள்ளது என தெரியாமல், திருவள்ளூர் டவுன் போலீசார் விழிபிதுங்கி உள்ளனர்.