கல்லூரி மாணவியை கடத்தி மணமுடித்த 17 வயது சிறுவன்: இருவர் மீதும் வழக்கு
9/18/2018 3:43:45 PM
திருவண்ணாமலை: கல்லூரி மாணவியை கடத்தி 17 வயது சிறுவன் திருமணம் செய்து கொண்டதாக வந்த புகாரின்பேரில் நீதிபதி விசாரணை நடத்தினார். இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் நேற்று கலசப்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர் ஒரு மனு அளித்தார். அதில் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவரும் எனது மகளை கெங்கலமகாதேவி கிராமத்தைச் சேர்ந்த 17வயது சிறுவன் கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜி.மகிழேந்தி நேற்று மாலை விசாரணை நடத்த சிறுவனின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் சிறுவனை காணவில்லை. அங்கிருந்த பெண்ணிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். பெண்ணுக்கு தற்போதுதான் 18 வயது நிறைவடைந்திருப்பதும், இவரை திருமணம் செய்தவருக்கு 17 வயது நிறைவடைந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 31ம் தேதி திருமணம் செய்து கொண்டு குடும்ப நடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இளம்பெண் மீட்கப்பட்டு கடலாடி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் 17 வயதான சிறுவனை, கல்லூரி மாணவி சட்டத்திற்கு புறம்பாக திருமணம் செய்து கொண்டதால் அவர் மீதும், அவருடன் பாலியல் குற்றம் புரிந்ததால் சிறுவன் மீதும் வழக்குப்பதிவு செய்ய கடலாடி போலீசாருக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் திருமணம் செய்து கொண்ட சிறுவன் மற்றும் கல்லூரி மாணவி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகளவில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சிறுவனை, 18வயது பெண் திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.