இந்திய அணியுடனான பயணத்தை முடித்து கொள்கிறேன்: உருக்கமாக ஓய்வை அறிவித்த வீரர்
9/5/2025 3:04:32 PM
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான ஆர்.பி. சிங் கடந்த 2005ம் ஆண்டு செப்டபர் 4ம் தேதி இந்திய அணியுடனான தனது பயணத்தை துவங்கினார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆர்.பி சிங் இந்திய அணிக்காக இதுவரை மொத்தம் 14 டெஸ்ட் போட்டிகள், 58 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி.20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 69 விக்கெட்டுகளையும், டி.20 போட்டிகளில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சில காரணங்களுக்காக இந்திய அணியில் இருந்து ஆர்.பி சிங் ஓரங்கட்டப்பட்டாலும், ஐ.பி.எல் போன்ற உள்ளூர் தொடர்களில் ஆர்.பி சிங் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் ஆர்.பி சிங் நேற்று திடீரென தனது ஓய்வு முடிவை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
கடந்த 13 வருடங்களுக்கு முன்பு சரியாக இதே நாளில் செப்டம்பர் 4ல், இந்திய அணியில் எனது பயணத்தை துவங்கினேன். இந்திய அணியின் நீல நிற ஜெர்சியை முதல் முறையாக அணிந்த அந்த தருணம் இப்பொழுதும் எனது நினைவில் உள்ளது. இந்த தேதியில் துவங்கிய எனது பயணத்தை இதே தேதியில் முடித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளேன். இது எனது வாழ்வில் மிக மோசமான நாள்.
இந்த தருணத்தில் என்னுடன் இத்தனை வருடங்கள் பயணித்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். உணர்ச்சிவசத்துடனே இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்த, என்னை திட்டிய, விமர்சித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு உருக்கமாக நீண்ட கடிதத்தை எழுதிஉள்ளார் ஆர்.பி.சிங்.