2.10 லட்சம் கனஅடி நீர்வரத்து: காவிரியில் வரலாறு காணாத வெள்ளம்: மேட்டூரில் 1.70 லட்சம் கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்கள் வெளியேற்றம்
8/16/2018 2:26:52 PM
திருச்சி: கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் விநாடிக்கு 2.10 லட்சம் கனஅடியாக ஒகேனக்கல் வந்தடைந்தது. இதனால் 10 ஆண்டுகளுக்கு பின்பு வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் பரிசல் துறைகளை மூழ்கடித்தவாறு மேட்டூர் அணை நோக்கி காவிரி பொங்கிப்பாய்ந்து செல்கிறது.
காவிரியில் அதிகளவு தண்ணீர் செல்வதால், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து, கரையோரம் வசிக்கும் மக்கள் குடும்பம், குடும்பமாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் கரையோர மக்களை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேட்டூரில் 16 கிராமங்கள், காவிரி கரையோரம் இருப்பவையாக கண்டறியப்பட்டு அங்கு நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. குமாரபாளையம் மணிமேகலை தெரு, அண்ணாநகர், கலைமகள் வீதி, பள்ளிபாளையத்தில் பெரியார் நகர், சுபாஷ்நகர் ஆகிய இடங்களில் வசித்த 187 குடும்பத்தினரை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி, குமாரபாளையம் நடராஜா திருமண மண்டபம், புத்தர்தெரு பள்ளி, ராஜேஸ்வரி திருமண மண்டபம், பள்ளிபாளையம் செங்குந்தர் திருமண மண்டபம், நாட்டாக்கவுண்டம்புதூர் அரசு பள்ளி ஆகிய இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
இதேபோல் மேட்டூர் தங்கமாபுரி பட்டணத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் மீட்கப்பட்டு அங்குள்ள நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தேவூரில் 2 குடும்பங்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.70 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் அப்படியே 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 120.30 அடியாகவும், நீர் இருப்பு 93.95 டிஎம்சியாகவும் உள்ளது. தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் மேட்டூர் இடைப்பாடி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூரில் இருந்து காவிரியில் ஏற்கனவே வினாடிக்கு 2.10 லட்சம் கனஅடி வீதம் வெள்ளம் வந்துகொண்டிருக்கும் நிலையில் பவானி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீர் 50 ஆயிரம் கனஅடியும், அமராவதியில் திறக்கப்பட்டுள்ள உபரி நீர் 11 ஆயிரம் கனஅடி நீரும் கலந்து காவிரியில் சுமார் 2.71 லட்சம் கனஅடி வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் இன்று நள்ளிரவு திருச்சி மாவட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று அதிகாலை 4 மணி அளவில் காவிரி, பவானி வெள்ளம் கரூர் மாவட்ட எல்லையான தவிட்டுபாளையம் கபவதி அம்மன் நகர், கரைப்பாக்கம் ஆகிய கிராமங்களில் புகுந்தது. இந்த பகுதிக்கு வெள்ளம் வரும் என நேற்றே எச்சரிக்கை செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள 100 வீடுகளை சேர்ந்த மக்கள் அருகில் உள்ள மாரியம்மன் கோயில் நகர் சமுதாய கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் வீடு மாற்றுவது போல அனைத்து பொருட்களையும் அள்ளிக்கொண்டு நேற்று மாலையே சமுதாய கூடம் சென்று விட்டனர். அதே நேரத்தில் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. நஞ்சை புகழூர் என்ற கிராமத்திலும் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இந்த பகுதி மக்களும் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இன்று நள்ளிரவு 2.71 லட்சம் கனஅடி வெள்ளத்தை திருச்சி மாவட்டம் எதிர்நோக்கி உள்ளதால், கல்லணை அருகே பல கிராமங்களில் ெவள்ளம் புகுந்து விடலாம் என கருதி அங்குள்ள மக்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.